பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2008

தேள்கடி மருந்து!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி இனிமேல்தான் »

தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனை செய்த ஒருவர் தேள்களை தன் உடலில் கொட்ட விட்டதால் விழுப்புரம் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட் டது.

சாதாரணமாக தேள் கடித்தால் 24 மணி நேரத்திற்கு வலி நீடிக்கும். கொடிய விஷம் உடைய நட்டுவாக்கலி கடித்தால் சில மணி நேரத்தில் விஷம் தலைக்கு ஏறி உயிருக்கே ஆபத்து ஏற்படும்.இந்த தேள் கடிக்கு கிராமப்புறங்களில் பல்வேறு விதமான விஷ முறிவு மருந்துகள் செய்யப்படுவது உண்டு. தேள் கடித்த இடத்தில் கல் ஒன்றை வைத்து கட்டி விஷத்தை எடுத்தவுடன் பாலில் அந்த கல்லை பாதுகாப்பாக வைப்பார்கள்.இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் தேள் கடிக்கு இன்னும் முறையான சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேள் கடி, பூரான் கடிக்கு மருந்து கொடுப்பதாக நகர்ப்புறங்களில் பலரும் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதே போல விழுப்புரம் பகுதியில் நேற்று திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தேள் கடிக்கு மருந்து விற்பனை செய்தார்.

தனது மருந்து சக்தியை நிரூபிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட தேள்களை பிடித்து தனது கைகளில் கொட்டுமாறு செய்து பிறகு அந்த விஷத்தை (பாதரசத்தால் தயாரித்ததாக கூறப்படும்) தனது கண்டுபிடிப்பு மருந்தை தேள் கொட்டிய இடத்தில் தடவி விஷம் முறிந்ததாக கூறுகிறார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகள் தொடர்பாக மனு கொடுப்பதற்காக ஏராள மான பொதுமக்கள் வந்திருந்த னர். இந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளையும் மறந்துவிட்டு இந்த தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இந்த மருந்தை அனைவரும் வாங்கிச் சென்றனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே தேளை தனது உடலில் கடிக்க விட்டு விஷ முறிவு மருந்தை விற்பனை செய்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: தினத்தந்தி

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 741 முறை) ::

இட ஒதுக்கீடு நாடகம்

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கப்போகும் இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

அடுத்து நிகழப்போவது என்ன?

செயல் வீரரான கலைஞர், இந்தச் சமுதாயப் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவதில் தானே முன்னோடியாகத் திகழ, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொந்தமான "கலைஞர் டிவி" மற்றும் இப்போது சண்டை சச்சரவெல்லம் ஒரு வழியாக ("ரவுண்டாக") முடிந்து ராசியாகி விட்ட "சன் டிவி" நிறுவனங்களில் உடனடியாக இட ஒதுக்கீடு அமல் படுத்திவிட்டதாக ஒரு அறிவிப்பு வரப்போகுது பாருங்கள்!

வாழ்க சமூக சிர்திருத்தம். வளர்க இட ஒதுக்கீட்டு அரசியல்!!

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 819 முறை) ::

பிறர் பிள்ளைகள்

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

ஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொண்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை செவி மடுக்காமல் இருக்க முடியுமா, அதுவும் சமாசாரம் சுவாரசியமாக இருந்தால்!

விஷயம் இதுதான் – சமீபத்தில் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் தன் மகன் வீட்டிற்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். மகனின் குழந்தைகளை சீராட்டிவிட்டு, அவர்களுக்கு baby sitting சேவைகளை செவ்வனே செய்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.

ஆனால் அவர்களுடைய பேரக் குழந்தையை சிறிது கடிந்து பேசிவிட்டாள் அந்த அம்மாள் என்பதற்காக அவர்களுடைய மருமகள் கோபப் பட்டிருக்கிறாள். அவர்களுடைய மகனும் முகத்தைக் காண்பித்திருக்கிறார்.

இதுதான் அந்த அம்மாளுடைய மனத்தாங்கலுக்குக் காரணம். "அவர்களுக்குச் செய்வதற்குத்தான் நானா? கண்டிப்பதற்கு உரிமை இல்லையா" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள், அந்த அம்மையார். அவருடைய புருஷன் சமாதானம் செய்து கொண்டிருந்தார், "இதைப்பார், பிறருடைய குழந்தைகளைக் கொஞ்சி சீராட்டி வளர்க்கலாம். அவர்களுடன் விளையாடலாம். ஆனால் கடிந்துபேச நமக்கு உரிமை இல்லை. அது அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு மட்டும்தான் உரிமையான விஷயம். அதுதான் சரியான அணுகுமுறை. இது நம் பேரக் குழந்தைகளுக்கும் பொருந்தும்" என்றார் அவர்.

கூர்மையாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கூற்று சரியானதுதான் என்று தோன்றுகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்ற பேச்சே இல்லாத இக்காலத்தில் சில நாட்கள் குழந்தைகளோடு இருக்கும் போது இனிமையாக பொழுதைக் கழிக்காமல் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் தலையிட்டு, குழந்தைகளின் தற்கால எண்ணப் பாங்கினையும் அவர்கள் வளரும் சூழலின் தன்மையையும் அறியாமல் அவர்களுக்கு அறிவுரை சொல்ல முயன்றால் பிணக்குதான் மிஞ்சும்.

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 869 முறை) ::

ஜிஎன்பியின் காம்போதி விருத்தம்

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

மறைந்த கர்நாடக இசை மாமேதை ஜிஎன்பி அவர்கள் சகுந்தலை திரைப்படத்தில் பாடியுள்ள நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இந்த காம்போதி ராக விருத்தத்தைக் கேட்டு மகிழுங்கள்!

இந்தத் திரைப்படத்தில் ஜிஎன்பி அவர்களுடைய குரல் வளம் முழுதும் வெளிப்படாமல் தடுக்க நிகழ்ந்த பல சதிகளைக் கடந்து, இந்த ஒரு பாடலிலேயே அவர் தன் இசையின் வீச்சை வெளிக்கொணர்ந்திருப்பதைக் காணலாம்.


YouTube - வீடியோவைக் காணுங்கள் GNB

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 1044 முறை) ::

பிறர் மனத்தில் எற்றிய படிமம்!

மனித மனம் :: 2 மறுமொழிகள் »

நித்யா தன்னம்பிக்கை மிக்கவள். அது தகுதி மற்றும் திட்டமிடல் அடிப்படையில் அமைந்த தன்னம்பிக்கை. எதைச் செய்தாலும் அதை பூர்த்தியாக செவ்வனே செய்து முடிப்பவள் என்று அவள் படிக்கும் கல்லூரியிலும் வீட்டிலும் பெயர் வாங்கியவள். அதனாலேயே அவளுடைய கல்லூரியில் எந்த நிகழ்ச்சியானாலும் அதை நடத்துவதற்கு கூப்பிடு நித்யாவை என்பதுதான் முதலில் காதில் விழும்.

அவள் இளங்கலை பொறியியலை முடிக்கும் நேரம். அனைத்து நதிகளும் கடலில் சங்கமமாகிறாற்போல் எந்த பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் வேலை தேடுவது என்னவோ கணினி மென்பொருள் துறைதான் என்றிருக்கும் இன்றைய நிலையில், நித்யாவோ தான் படித்துக் கொண்டிருக்கும் மின்னியல் துறையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்கேற்றாற்போல் ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள்.

நித்யாவின் சுபாவப்படி அவள் தகுந்த முன்னேற்பாட்டுடன் தேர்வுக்குச் சென்றாள். அவளுடைய பாடத்திலும் சரி, நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஆளுமை போன்ற எந்தத் துறையிலும் எல்லோரைக்காட்டிலும் சிறந்த திறமைசாலியாக அவள் விளங்குவாள் என்பதில் அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதுபோல் அவள் பூர்வாங்கத் தேர்வுகளை வெற்றிகரமாகத் தாண்டி நேர்முகத் தேர்விலும் அனைத்து கேள்விகளுக்கும் தீர்மானமன தன்னம்பிக்கையுடன் சரியாக விடையளித்திருந்தாள். அந்தத் தேர்வை தலைமையேற்று நடத்திய நிர்வாகியும் மிகத்திருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினார்.

அந்த நிறுவனம் பெருமை வாய்ந்த ஒன்று. நித்யாவுக்கு நிச்சயம் கிட்டப்போகிற அதிர்ஷ்டத்தை எண்ணி அவளுடைய பெற்றோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

ஆனால் வேலைக்கான ஆணையேதும் வரவில்லை. சில காலம் பொருத்துப் பார்த்துவிட்டு அவளுடைய தந்தை விசாரித்துப் பார்த்ததில் அவள் தேர்வு பெறவில்லையென்று தெரிவிக்கப்பட்டது. நித்யா, ஒருபுறம் ஏமாற்றமும், இன்னொருபுறம் தான் தேர்வு பெறாததற்கான காரணத்தை அறியும் ஆவலும் மிக்கவளாக தன் கல்லூரி சீனியர் யாரேனும் அங்கு வேலை பார்த்தால் அவர்கள் மூலம் விவரம் அறியலாம் என்று விசாரிக்கத் தொடங்கினாள்.

அவள் நேர்முகத் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது உண்மை. ஆனால் அவளுடைய பேச்சின் தோரணை, ஓங்கிய குரல், கைகளையும் விரல்களையும் நீட்டி அசைத்துப் பேசும் முறை, சில ஆங்கில சொற்களை வேண்டுமென்றே ஸ்டைலாக உச்சரித்துப் பேசும் பழக்கம் இவையெல்லாம் அந்த நிறுவன மேலாளர்கள் மனத்தில், அவள் பிறரோடு ஒத்துப் போய் அனுசரிக்கத் தயங்கும் தனித்தியங்கி (loner) என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டன. இது நித்யாவின் உண்மையான தோற்றம் இல்லை என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் இவ்வுலகில் நீ யார் (உண்மையில்) என்பது முக்கியமல்ல. நீ யாராக பிறரால் அறியப்படுகிறாயோ அதுதான் முக்கியம்.

ஆகையால் பிறர் மனத்தில் நம்மைப்பற்றி எத்தகைய இமேஜை ஏற்படுத்துகிறோம், நம்மை எவ்வாறு இந்த சமூகத்திடம் அறியப்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் வெற்றி இருக்கிறது.

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 1346 முறை) ::

சிறு விஷயங்களில் கவனம் தேவை!

நல்வாழ்வு :: மறுமொழி ஒன்று »

சின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் முழுமையை எட்ட முடியும் என்று அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் நம் அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்துவிடுகிறோம். எனெனில் அவை நம்மைப் பொருத்தவரை முக்கியமானவை என்னும் பட்டியலில் வரவில்லை. உதாரணத்திற்கு, சட்டைக்குப் பொத்தான்களைப் போடுவது, ஷூ லேஸ்களை சரியாகக் கட்டுவது, சட்டையை பாண்டிற்குள் "டக் இன்" செய்தால் அதனை நேர்சீராகச் செய்வது – இப்படி பலவகை சாதாரணச் செயல்பாடுகளை முக்கியத்துவம் கொடுக்காமல் செய்கிறோம். ஆனால் உணமையில் அவை மிகவும் முக்கியமானவை என்பதை நாம் அறியாமலிருப்பது நமக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் நாம் அறிந்தோமில்லை!

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம் நடையுடை பாவனைகளை உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் உள்ளார்கள் என்று அறியும்போது நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கும். நாம் நம்மையறியாமல் செய்யும் (sometimes due to nervous habits) அங்க சேஷ்டைகளை மக்கள் கூர்ந்து கவனித்து கிண்டலடிப்பது நமக்கு பெரும்பாலும் தெரியவருவதில்லை. ஆனால் நாம் சிலரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முன்றாம் மனிதர்களின் பழக்க வழக்கங்களை வைத்து கேலி செய்வதைக் காண்கிறோம். நமக்கும் இந்த கதிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

சாதாரணமாக இத்தகைய உரையாடல்களை அன்றாடம் செவிமடுக்கிறோம்:

"அவரா, எப்போதும் பங்கி மாதிரி தொளதொள சட்டை போட்டுகிட்டு வருவாரே, அவர்தானே"
"அந்த மூக்கு நோண்டிதானே"
"நேத்து அந்த 'நாக்கு துருத்தி' வந்திருந்தான்ய்யா"
"ஏனய்யா, அந்த ஆளு தலையை சீவவே மாட்டானா? எப்ப பாத்தாலும் இப்பத்தான் படுக்கையிலேருந்து எந்திரிச்ச மாதிரி இருக்கான்"

இதையெல்லாம் விடுங்க. நீங்கள் ஒரு பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்தாலோ அல்லது அங்கு சென்று ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவராயிருந்தாலோ நீங்கள் கட்டாயம் உங்கள், டிரெஸ், உடலசைவு, அனிச்சைச் செயல்கள் இவற்றில் முழுக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் செயல்களை வைத்தே உங்களுக்குப் பட்டப் பெயர் சூட்டிவிடுவார்கள். அதுவும் இப்போதைய இண்டெர்நெட் உலகில் தொழில்நுட்பத்தை வைத்தே உங்களை பாடுபடுத்தி விடுவார்கள்.

என் நண்பர் ஒருவர் ஒரு பொறியியல் கல்லூரிக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி விட்டு வந்தார். அவர் ரொம்பப் பேசி "கிரைண்டு" பண்ணினாரோ, அல்லது பசங்களுக்கு வெறுப்பேத்தரமாதிரி ஏதேனும் அறிவுரை கொடுத்துவிட்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் சென்று வந்த ஓரிரு நாட்களில் யூடியூபில் (YouTube) ஒரு வீடியோ படத்தை வலையேறிவிட்டார்கள், அந்த கல்லூரி மாணவ மணிகள். அந்த வீடியோ குறும்படத்தில், என் நண்பர் கையைச் சொறிவதும், பிருஷ்ட பகத்தில் சொறிவதும், மூக்கிலிருந்து தங்கப் பாளம் தோண்டுவதும், மேலும் அவர் முகத்தில் தோன்றிய பலவித அஷ்டக் கோணல்களும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டன!

இன்னொருவர் தன் உறவினரின் பையனைச் சந்திக்கச் சென்றார். அவன் ஒரு பேச்சிலர். ஒரு லாட்ஜில் ரூம் எடுத்திருந்தான். அவனுடன் ஒரிரு நாட்கள் தங்கியிருந்து சென்றார். பாவம், அவர் குடும்பஸ்தர், பலவித கவலைகள். லாட்ஜிலிருக்கும் காமன் பாத்ரூமுக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு ஏதோ நினைவில் ஃபிளஷ் செய்யாமல் சென்று விட்டார். பாவம், அந்தப் பையன். அவனை கிட்டத்தட்ட ஒரு மாதம் இதை வைத்தே காய்ச்சிவிட்டனர், அந்த லாட்ஜில் தங்கியிருந்தவர்கள். அதனால், மகாஜனங்களே, பாது ரூமிற்குச் சென்றால் ஒரு தடவைக்கு இரண்டு தடவை ஃபிளஷ் செய்து விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் மனைவியே உங்களை கிண்டல் செய்வார்!

ஆமாம், ஏதோ இழப்புக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே! அவை அடுத்த இடுகையில்…!

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 1130 முறை) ::

உன் சமர்த்து!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

சீனிராஜ் சிவகுமார் என்பவர் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான கவிதைகள் பல ஆக்கி அளித்துள்ளார், தம் "சிவமகா" என்னும் வலைத்தளத்தில். அங்கு உதிர்ந்துள்ளதொரு முத்து இது:

வாழையடி வாழை

வழுக்கையின் பரப்பளவு கூடும் முன்னே
வீடுகட்ட வாங்கியதை அடைக்க வேண்டும்
விழுக்காடு கூடுவதும் தெரிய வில்லை
வங்கியிலே கேட்டாலும் புரிய வில்லை
இழக்காமல் சேர்ப்பதற்கு முடிய வில்லை
ஏன்தம்பி சரிகிறது நிஃப்டி, சென்செக்ஸ்?
ஒழுங்காக மேற்கல்வி பயின்றி ருந்தால்
ஓடாகத் தேய்ந்திருக்கத் தேவை யில்லை

பேஸிக்கும் டீஏவும் ஏறி னாலும்
பேர்பாதி தவணைக்கே போத வில்லை
யோசிச்சு யோசிச்சு செலவு செஞ்சும்
எட்டாம்நாள் அக்கவுன்டில் ஏது மில்லை
ஆசைக்கோர் அரைவேட்டி எடுக்க வில்லை
அவளுக்கோ துணிக்கடையே தீர்ந்து போச்சு
பூசைகள் செய்தாலும் ஏற்ற மில்லை
பூங்காவில் அமர்ந்தாலும் இளைக்கும் மூச்சு

காதுகுத்தல் கல்யாணம் வந்து விட்டால்
கவரோடு போய்நின்று கை குலுக்கிப்
பாதிமுகம் ஒளிப்படத்தில் தெரியு மாறு
பல்வரிசை காட்டிவிட்டு வருவ தற்குப்
போதாது நான்பார்த்த நாலு OT
போகலைன்னா புலம்பிடுவா எம்பொண் டாட்டி
போதிமரம் எங்கிருக்கு சொல்லுங் கப்பா
பொதுவாய்த்தான் கேட்கின்றேன் உதவு மில்ல?

இன்பங்கள் துறப்பதற்குப் புத்தன் இல்லை
இருந்தாலும் நச்சரிப்புத் தாங்க வில்லை
பெண்பார்த்த போதெனக்குப் புத்தி தூங்கி
பவுடர் பூ பசப்பலில்தான் விழுந்துட் டேனோ?
உண்பதற்கு வாய்திறக்கும் வேளை யில்தான்
உயிரெடுக்க வாய்திறப்பாள் என்னில் பாதி.
அன்பான சொல்கூடத் தேவை யில்லை
அமைதியாக இருந்தாலே அவள்தான் சாமி.

வகையறாக்கள் வந்துவிட்டால் சிரித்து வைத்து
வகைசெய்ய வேண்டுமடா மூன்று நாட்கள்
பகையெல்லாம் இவர்கள்தாம் என்ற போதும்
போய்ச்சேர்ந்தால் வேண்டுமடா எட்டு கால்கள்
மகனுக்கு உதட்டின்மேல் கறுக்கும் போது
மாட்டாமல் உருப்பட்டால் நல்ல வேளை.
மகளுக்குத் தேடவேண்டும் பொன்கொ டுத்து
மத்தபடி மருமவனே உன்ச மர்த்து.

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 842 முறை) ::

பண்பாடு

நல்வாழ்வு :: 5 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் How responsible are we towards the society?

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 1128 முறை) ::

கணினி வல்லுனர்கள்

கணினி :: மறுமொழி இனிமேல்தான் »

என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் music collection பற்றி நிறைய பில்டு அப் கொடுத்தார்.

PC-யிடம் சென்று அவர் ஒவ்வொன்றாக தடவித்தடவி கிளிக் செய்து கொண்டிருந்ததிலிருந்தே அவருடைய அனுபவ அறிவு புலப்பட்டது. பிறகு ஒரு பாட்டின் கோப்பின்மேல் கிளிக் செய்தார். கர்ஸர் பாட்டுக்கு உடுக்கடித்துக் கொண்டிருந்ததேயன்றி வேறு ஒன்றும் நடக்கக் காணோம். "என்ன இவ்வளவு நேரம் ஆகிறதே" என்று கேட்டதற்கு அவர் "பொதுவாகவே கம்ப்யூட்டரில் அவ்வளவு நேரம் ஆகும்" என்று இப்படி ஒன்றுமே தெரியாத ஞானசூனியத்திடம் பேசவேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்னார்!

இதனிடையே நான் அந்த கம்ப்யூட்டரின் விவரங்களைப் பார்த்தால் அது Pentium-2 processor, 128 mb RAM வீரியம் கொண்ட அதிவேகக் குதிரை என்பது தெரிந்தது. நண்பரிடம், "இது பழைய கான்ஃபிகரேஷனாக இருக்கிறதே, அப்கிரேடு செய்யுங்களேன். ஃபாஸ்டாக இருக்க்கும்" என்று ஆலோசனை தெரிவித்தேன்.

வதது வினை. உடனே கோபமாக என் பக்கம் திரும்பி, "என் மச்சினன் தன் கையால் பூட்டின கம்ப்யூட்டராக்கும் இது. என்ன ஜோரா லோடு எடுக்குது தெரியுமா?" என்றார்!

சரி, லோடு ஏற்றும் லாரி ரேஞ்சுக்கு கம்ப்யூட்டரைக் கொண்டு சென்ற நிபுணரிடம் பேசி ஒன்றும் ஆகப் போவத்தில்லை என்பதாலும், அவருடைய மைத்துனர் வேறு இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மேலும் கதவிடுக்கிலிருந்து அனல் வீசும் கண்கள் எதோ தெரிந்ததுபோல் ஒரு மனப் பிராந்தி உண்டானதாலும், நான் உடனே ஜகா வாங்கி, ஜூட் விட்டு அம்பேலானேன்!

இவரை விட விஷய ஞானி ஒருவர் எனக்கு ஃபோன் செய்து மிகவும் பதட்டத்துடன், "என் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டைக் கணவில்லை" என்றார். "எந்த வலைத்தளத்திற்குச் செல்ல முயற்சித்தீர்கள், என்ன மெசேஜ் வருகிறது" என்று கேட்டேன். அவர் ஒரு பெருமூச்சு விட்டு, "இண்டெர்நெட்டே வரமாட்டேனென்கிறது. சைட்டுக்கு எப்படிப் போவது" என்றார்.

சுமார் இருபத்தி ஒன்று கேள்விகளுக்குப் பின் நான் தெரிந்து கொண்ட நிலவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடந்தது என்னவென்றால், மனிதர் எல்லா கோப்புகளையும் default-ஆக டெஸ்க்டாப்பில்தான் சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதால் ஸ்கிரீன் முழுவதும் ஒரு அம்புக்குறிக்குக் கூட இடமில்லாத படி ஐகானாக நிரம்பியிருக்கிறது. அவற்றில் உலாவிக்கான (வேறு என்ன – ஐ.யி கண்றாவிதான்!) ஷார்ட்கட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் இருக்கும். அதை கிளிக் செய்து வெப்சைட்டுகளுக்கு அவர் செல்வது வழக்கம். இடையில் அவரோ வேறு யாரோ ஐகான்களை இடம் மாற்றிவிட்டார்கள். அதான் அந்த வல்லுனர் "இண்டெர்நெட்டை"த் தெடிக் கொண்டிருக்கிறார்!

அவர் அதைத் தேடட்டும். நாம் போய் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியாக எதையாவது தேடுவோம்!

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 892 முறை) ::

படப்பொருத்தம் பாரீர்!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »
என்ன பொருத்தம்!

என்ன பொருத்தம்!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 967 முறை) ::

 

5-ல் இது-112345
WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 48 access attempts in the last 7 days.