என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”
ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!
ஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!
அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?
இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.
என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 28th, 2009. 10 மறுமொழிகள்.
நண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை – ஓதுவித்து – அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற நிகழ்ச்சி. இந்த பூணல் பற்றிய விவரங்களை பிரிதொரு நாளில் விவாதிப்போம். தற்போது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருள் அதன் தன்மையைப் பற்றியதல்ல.
அன்று பூணல் “கல்யாணம்” செய்து கொண்ட பையனின் வயது 7 (”கர்ப்பத்தில் இருந்ததைச் சேர்த்து ஏழு” – பையனின் அப்பா). விளையாட்டிலேயே கவனம் கொண்டிருக்கும் சிறு பையன். புகையும், அனலும், இறைச்சலும், பசியும் சேர்ந்து அவனைச் சோர்வடைய வைத்திருந்தன. பிரம்மோபதேசம் முடிந்ததும், உறவினர்களுக்கு நமஸ்காரம் செய்யும் சடங்கு.
பிறகு வீட்டில் பெரியவர்களிடமிருந்து “பிக்ஷை” வாங்கும் நிகழ்ச்சி. பையன் எழுந்து நின்று “பவதி பிக்ஷாந்தேகி” என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும். அந்தப் பெண்மணிகள் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து ஒரு லிட்டர் அளவு அரிசியை எடுத்து பையனிடம் கொடுப்பர். அதை அவன் மறுபடியும் அந்தப் பாத்திரத்திலேயே திருப்பிக் கொட்டிவிடுவான். பிறகு இன்னொரு பெண்மணி. இப்படித் தொடர்ந்தது இந்தச் சடங்கு.
ஒரு நிலையில் அந்தச் சிறுவனால் தாங்க முடியவில்லை. அழத் தொடங்கிவிட்டான். பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். ஆனால் விடவில்லை, பெற்றோரும் உறவினரும். அழுது கொண்டே நின்ற அந்தச் சிறுவனின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது.
பையனின் தந்தையிடம், ”ஏனய்யா அந்தச் சின்னப் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதை வைத்துக் கொள்ளக் கூடாதா? இவனுக்கு இருக்கும் ஸ்கூல், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம் ஒர்க், கிரிக்கெட், டி.வி இதனூடே இவன் என்ன சந்தியாவந்தனம் செய்து கிழிக்கப் போகிறான்?” என்று வினவியதற்கு அவருடைய பதில்:
“அவ்னுடைய வயதான பாட்டி நான் இருக்கும்போதே பேரனுக்கு பூணல் போட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் பட்டாள். அதனால்தான்”
காரணத்தைப் பார்த்தீர்களா! பையனின் வயதோ, சுகமோ அவனுடய ஒப்புமையோ முக்கியமல்ல. இன்னொருவருடைய ஆசை, fanciful wish அதுதான் முக்கியம்!
இதாவது பரவாயில்லை. பல ஒவ்வாத திருமணங்கள் இதுபோன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:
- சொத்து குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது,
- ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவு விட்டுப் போகக் கூடாது,
- பெரியவருக்கு இறக்குமுன் வாக்குக் கொடுத்துவிட்டேன்,
- மனப் பொருத்தம் பார்க்காமல் ஒரு அறைகுறை ஜோசியனின் வாக்கை நம்பி முடிவெடுத்தல்,
- சாமியார் சொல்லிவிட்டார் என்று முடிச்சுப் போடுவது
- பெரிய இடத்து சம்பந்தம்
இப்படி தொடர்பில்லாத காரணிகளையும் அளவுருக்களையும் கருத்தில் கொண்டு திருமணம் என்னும் வாழ்வின் மிகமுக்கிய கட்டத்தினை தீர்மானிக்கின்றனர். இப்படி பொருந்தா மணம் எப்படித் தொடர்கின்றது? அந்தப் பையனோ பெண்ணோ சினிமாக்களாலும் ஊடகங்களாலும் உந்தப்பட்டு படிக்கும் காலையிலேயே காதல் வசப்பட்டிருந்த சிக்கல் வெளியே தெரியவந்தபின் மணமுறிவுக்காக நீதிமன்ற வாசலில் நிற்கும் நிலை வருகிறது. அந்நேரத்தில் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி நின்ற கிரகங்களோ, தேவதைகளோ, மந்திரங்களோ துணை நிற்பதில்லை. வக்கீல்களும், சாட்சிகளும், பிணைகளும் தான் கூட வருகின்றன. அவ்விடத்தில் உண்மைக்கும் வேலையில்லை, உணர்வுக்கும் வேலையில்லை.
சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறை மாற்றங்களையும், வெளிச் சூழலின் பாதிப்பால் நிகழும் மனவெழுச்சிகளையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினிடையே எழுந்துள்ள பழமை எதிர்ப்பையும் மனத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தால், பின்னர் தோன்றும் பல கசப்பான நிகழ்வுகளை தடுக்கலாம்.
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: மே 28th, 2009. மறுமொழி இடுக.
சௌந்திரராஜன் தெய்வபக்தி நிரம்பியவர். தினமும் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து, பூஜைகளை முடித்தபின் தான் எதையும் உண்பார். எந்நேரமும் தெய்வ சிந்தனைதான். அதுவும் இராமன்தான் அவருடைய இஷ்ட தெய்வம். தியகராஜருடைய கிருதிகளை நெக்குருகப் பாடிக்கொண்டேயிருப்பார். அவர்கள் வீட்டு டிவியில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியும் அதேபோல் கோயில், குளம் என்றுதான் பேசிக்கொண்டிருப்பார். எந்தக் கோயிலில் என்ன விசேஷம் என்று விசாரித்து சென்ற வண்ணம் இருப்பார். விரதம், உபவாசம் என்று உடலை வருத்திக் கொள்வார். இதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு சிந்தனையே கிடையாது. செயலும் கிடையாது. தவிர, உதவி என்று யார் வந்து கேட்டாலும் தன்னாலியன்றதைச் செய்யத் தயங்கவே மாட்டார்கள். தம் ஜன்மமே பிறருக்குப் பயன்படத்தான் என்ற சித்தாந்தத்தில் பூரண நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர்.
அவர்களுக்கு ஒரே குழந்தை, அவர்களது மகன். அவனுக்கு இப்போது 33 வயது முடிந்துவிட்டது. ஆனால் அந்தப் புத்திரன் விஷயத்தில் அவர்கள் அனவரதமும் தொழும் அந்த பெருமாள் அவர்களை மிகவும் சோதித்துவிட்டார்!
ஆம். அந்தப் பையன் ஆட்டிஸம் (Autism) எனப்படும் நுண்ணுணர்வு வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளான். அது தவிர வேறு சில மூளை தொடர்பான கோளாறுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்போது உட்கொண்ட வீரியமிக்க மருந்துகளின் தாக்கத்தால் பேசும் சக்தியையும் அநேகமாக இழந்துவிட்டான். ஒரு பெரிய உருவம் கொண்ட 1 வயது குழந்தைபோல அவனைக் கருதவேண்டிய நிலை.
அந்தப் பையனின் சில அடிப்படை இயல்புகள்-
- அவனால் பிறர் பேசுவதை உள்வாங்கி எதிர்வினை புரிய இயலாது
- அவனுடைய வீட்டில் எல்லாப் பொருட்களும் முன்பிருந்த நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பான். ஒரு நாற்காலி சிறிது இடம் பெயர்ந்திருந்தாலும் உடனே மாற்றி வைத்துவிடுவான்
- தன் குடும்பத்தினர் மற்றும் நன்கு பழகியவர்களைக் காணும்போது அவர்களின் தலைமுடி சிறிது கலைந்திருந்தால்கூட ஓடிச் சென்று அதனை சரி செய்வான். மோதிரம் சிறிது சுழன்றிருந்தாலும் நுணுக்கமாகக் கவனித்து அதனை நேராக்குவான்
- அவனுக்குப் பிடித்தமான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் எங்கிருந்தாலும் உடனே எடுத்துச் சாப்பிட்டுவிடுவான். அதனால் பெரும்பாலும் அடுத்தவர் இல்லங்களுக்கோ பொது இடங்களுக்கோ அவனை அழைத்துச் செல்ல மாட்டார்கள்
- நடந்து செல்லும்போது எதிரே வரும் நபரின்மேல் இடித்துக் கொண்டே செல்வான்
இவையெல்லாம் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.
சௌந்திரராஜன் தம்பதிகளுக்கும் வயதாகி விட்டது. தங்களுக்குப் பிறகு இந்தப் பையனை யார் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் கவலை அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு பிறரிடம் பழகுவது எப்ப்படி, பொது இடங்களில் நடந்துகொள்வது எப்படி போன்றவை ஒன்றும் தெரியாது.
இந்தப் பையனுக்கு விமோசனம் என்ன?
அவன் பெயர் ஸ்ரீராம்!
அவர்கள் அன்றாடம் தொழும் ஸ்ரீராமன்தான் வழிகாட்டவேண்டும்!
நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே -
இம்மையே இ'ராம' என்று இரண்டு எழுத்தினால்.
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: பிப் 6th, 2008. 1 மறுமொழி.
நாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுகிறோமா? இல்லையே!
அவர்கள் வளர்ந்தவர்கள்போல் நடக்கவேண்டும் என்றல்லவோ எதிர்பார்க்கிறோம்!
இதோ அஜீவன் அவர்களின் ஒரு குறும்படம்!
Google - வீடியோவைக் காணுங்கள் Tender Heart
சார்ந்த வகை: மனித நேயம் :: நாள்: நவ 20th, 2007. மறுமொழி இடுக.
சமீபத்திய மறுமொழிகள்