கட்டங்கள் கஷ்டங்கள்

திரைப்படங்களும், ஊடகங்களூம், நாவல்களும் ஏதோ காதல் செய்வதுதான் இளைஞர்களின் வாழ்வின் மிக அத்தியாவசியமான கடமை போன்ற – அன்றாடம் சாப்பாடு சாப்பிட்டு பாத்ரூம் போவது போல் – ஒரு தோற்றத்தை உண்டாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அதைப் பற்றியே துவைத்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. 45-50 வயது தாத்தாக்களெல்லாம் (டை, விக், பான்கேக் சகிதம்) கல்லூரி இளைஞர் வேஷம் போட்டுக் கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கால இளைஞர்கள் (நகரங்களில் வசிக்கும் படித்தவர்களைக் குறிப்பிடுகிறேன்) அப்படி ஒன்றும் காதல் திருமணம் செய்வதில் அவ்வளவு முனைப்பாய் இருப்பதுபோல் தோன்றவில்லை. இன்றைய நிலையில் எல்லோர் மனமும் தன் எதிர்காலத்தை நிலைப்படுத்தும் வேலையிலேயே வியாபித்து நிற்கின்றது. They have become so career-oriented that they have neither the time nor inclination for indulging in such fancies!

எனக்குப் பழக்கமான ஒரு இளம்பெண்ணை அன்றைய தினம் இஸ்பஹானி சென்டரில் சந்தித்துக் கேட்டேன், “என்ன மத்ஸ், BPO வேலையிலே சேர்ந்தாச்சு; அடுத்தது யாராவது பையன்களை லவ் பண்ணி அதிலே ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. பார்க்க கொஞ்சம் பரவாயில்லாம இருக்கேயே, பசங்க ஒத்தனும் கண்டுக்கல்லையா” அப்படீன்னு கேட்டேன். அதற்கு அவள், “அங்க்ஸ், கல்யாணமெல்லாம் பெரிய responsibility. அதெல்லாம் அப்பா, அம்மா பாத்துக்குவாங்க. எனக்கு லைஃப்ல செட்டில் ஆகணும். MBA பண்ணனும் (சில படிப்பெல்லாம் “படிக்கிறது” கிடையாது – “பண்ணறது” தான்!). கைல கொஞ்சம் காசு சேக்கணும், நல்லா டிரெஸ் பண்ணனும், ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கணும். அவ்வளவ்தான்” இப்படிப் போகிறது அவளுடைய சிந்தனைகள்.

சரி. இவர்களின் பெற்றோர்கள் செயல்பாடுதான் என்ன? வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை வருகிறதல்லவா? பிரித்துப் பாருங்கள் ஹிந்து நாளிதழின் மணமகன் தேவை விளம்பரங்களை. ஜாதிவாரியாக வரும் இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. “இங்க வாங்க, நல்ல வெளைஞ்ச கத்திரிக்காய்”ங்கிற மாதிரி, “ஒல்லியான, சிவப்பு நிறத்தாளுக்கு கைநிறைய சம்பாதிக்கும், நல்ல பழக்க வழக்கமுள்ள மணமகன் தேவை” – இது பொதுவாக எல்லோரும் கூவுவது. ஆனால் தன் பெண்ணைப்பற்றி சென்றவாரம் பெற்றோர் எழுதியிருக்கும் வர்ணனைகளைப் பாருங்கள்:-

“Slim, Fair, Pretty, Smart, Perfectionist, God-fearing, Home-loving, disciplinarian, well-trained in domesticity”

இது தவிர பல சுயம்வர வலைத்தளங்களின் பெண்களின் பல கோணப் புகைப்படங்கள் வெளியிட்டு நவீன முறையில் துணை தேடுகிறார்கள்.

அதுவும் பெண்கள் பிறந்த நட்சத்திரங்கள் கொஞ்சம் ஏடாகூடமாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். இதற்காகவே இப்போதெல்லாம் நல்ல நட்சத்திரங்களின் வேளை வந்தவுடன் சிஸேரியன் செக்ஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்துவிடுகிறார்கள்.

  • ஆயில்யம் = = மாமியார் ஆஷாண்டி (நோய்வாய்ப்படுவார்)
  • பூராடம் = = அவள் கழுத்தில் நூலாடாது (பையன் சீக்கிறமே வைகுண்டம் போவான்)
  • மூலம் = = மாமியார் மூலையிலே (மாமனாருக்கு சங்கு)
  • கேட்டை = = மாப்பிள்ளையின் அண்ணனுக்கு ஆகாது (ஜ்யேஷ்டன்)
  • விசாகம் = = தம்பிக்கு ஆகாது (கனிஷ்டன்)

எனக்குத் தெரிந்த ஒருவரின் பெண்ணுக்கு மூல நட்சத்திரம். அவர் யார்யார் வீட்டிலெல்லாம் பையனின் தகப்பனார் உயிருடன் இல்லை என்று பார்த்து அணுகவேண்டும். அவர் இந்தத் தேடலில் சந்த்தித்த சிறுமையும் அவமானங்களும் கணக்கில் அடங்காது. என்ன உலகமடா இது என்று நொந்து போனார் அவர்!

ஆனால் பெண்களின் அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது. அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படையாகக் காண்பிக்கத் தொடங்கி விட்டனர். எனக்கென்னவோ குடும்பக் கட்டுப்பாடு, சூல்புகுந்து பாலறிதல், female infanticide போன்ற காரணங்களினால் பெண்களின் எண்ணிக்கை குறைந்துபோய்க் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. கொஞ்ச நாள் போனால் பிள்ளையைப் பெற்றவர்கள் “லோலோ”வென்று அலைய வேண்டியிருக்குமோ என்னமோ!

அது சரி, நான் சொல்ல வந்ததே வேறு. ஏன் இப்படி எல்லா வகுப்பினரும் ஜோதிடத்தை கட்டிக் கொண்டு அலைகிறார்கள். அது ஒரு முறையாக வரையறுக்கப் படாத, அரைகுறைகள் நிறைந்த pseudo-science. அன்றொரு நாள் ஒருவர் மாம்பலத்திலுள்ள ஒரு ஜோஸ்யரிடம் இரு ஜாதகங்களைக் காண்பித்து பொருத்தம் பார்க்கக் கொடுத்திருக்கிறார் (ஒன்று அவர் பையனுடையது). பத்திற்கு ஒன்பது பொருத்தம் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். மறுநாள் பெண்ணின் பெற்றோர் அதே ஜோஸ்யரிடம் அதே இரு ஜாதகங்களைக் காண்பித்திருக்கிறார்கள். இரண்டும் கொஞ்சமும் பொருத்தமில்லை என்றிருக்கிறார். இந்த செய்தியை பையனின் பெற்றோரிடம் தெரிவித்த போது, இதே ஜோஸியர் பொருத்தம் என்று சொல்லியிருந்தாரே என்று கோபப்பட்டு, பின் இரண்டு தரப்பினரும் அந்த ஜோஸியரிடம் confront செய்தபோது, “ஒஹோ, அப்படியா சொன்னேன். சரியாகப் பாக்காம சொல்லிட்டென் போலேருக்கு” என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளர் வாழ்க்கையைக் கெடுக்கப் போய்விட்டார். இதுபோல பொறுப்பில்லாத quack களினால் பலருக்கு அமையக்கூடிய சிறப்பான வாழ்க்கை கைநழுவிப் போய் விடுகிறதே என்று என்ணும்போது, இவர்கள்மேல் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தால் என்ன என்று தோன்றுகிறது.

Horoscope-ஐ Horror-scope ஆக்கிவிடும் இந்த ASS-trology-ஐ இன்னும் நம்ப வேண்டுமா என்பது என் கேள்வி. ஆனால் மக்கள், “வேறு என்ன செய்வது? எந்த முறையில் நாம் நேரில் அறிய முடியாத பிறர் மனநிலையையும், தம்பதிகளின் எதிர்காலத்தையும் கணிப்பது?” என்று கேட்கிறார்கள்.

என்னதான் இதற்கு மாற்று?

12 Comments


  1. போலி டாக்டரிடம் சென்று ஏமாந்து medicine = mad n sin சொல்வது போல் இருக்கு உங்கள் வார்த்தை ஜாலம்.

    Astrology is a science.

    கச்சா எண்ணையிலிருந்து எரிபொருள் தயாரித்தவரும் விஞ்ஞானிதான், மூலிகை எரிபொருள் என்று புருடா விட்டவரையும் விஞ்ஞானி என்று சொல்லி கொண்டு திரிந்தோம்.

    ஆகவே குறை ஜோதிடத்தில் அல்ல, அதை சரியாக படிக்காத அரை குறை ஜோதிடர்களிடம் உள்ளது.


  2. பதிவு நல்லாயிருக்கு. அதுசரி, தமிழ்மணத்தில 80 பின்னூட்டம் வந்ததாக் காட்டுதே. ஆனா இங்க வந்தா ஒண்டக் கூடக் காணேல. எங்கயாவது ஒழிச்சு வச்சிருக்கிறீரோ?


  3. தமிழ்மணத்தில் பின்னூட்ட அடுக்கு காட்டுதற்கு என் தவறுதான் காரணம். ஒட்டுமொத்த மறுமொழி எண்ணிக்கையைக் காட்டும் நிரல்துண்டை இட்டுவிட்டேன்.இப்போதுதான் அதனை சரிசெய்தேன். காசி அவர்களுக்கு மடல் அனுப்பி திரைக்குப் பின்னே சென்று மாற்றம் செய்யும்படி கோரலாமென்றிருக்கிறேன்.

    அது சரி, வசந்தன், 80 பின்னூட்டமெல்லாம் வருவதற்கு நான் என்ன ஜாதி, மதம், ஜயேந்திரர், கமல், ரஜனி, தமிழக அரசியல், இலங்கை அரசியல் போன்ற காரம் மணம் (குணம்தான் கொஞ்சம் கம்மி!) கமழும் மசாலா சப்ஜக்ட்களைப் பற்றியா எழுதுகிறேன்! 🙂


  4. //
    ஆகவே குறை ஜோதிடத்தில் அல்ல, அதை சரியாக படிக்காத அரை குறை ஜோதிடர்களிடம் உள்ளது.
    //

    ஜோதிடத்தால் ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களுக்கு என்ன பயன் என்று இது வரை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை !


  5. அச்சச்சோ

    //விசாகம் = = தம்பிக்கு ஆகாது (கனிஷ்டன்)//

    எனக்கு விசாகமாச்சே!!!!மைத்துனனுக்கு ஆகாதா? என்ன செய்யறது?
    கல்யாணமாகி இப்பத்தான் 32 வருஷமாகப் போகுது!!!!

    நல்ல பதிவு!!!!

    என்றும் அன்புடன்,
    துளசி.


  6. //சூல்புகுந்து பாலறிதல்// நல்ல வார்த்தை.

    நன்றாக எழுதப்பட்ட பதிவு.
    நன்றிகள்


  7. பெட்டிக்கடை நண்பரே,

    நல்ல பதிவு! எழுதும் பாணி ரசிக்கத்தக்க வகையில் உள்ளது. தங்கமணி கூறியது போல “சூல்புகுந்து பாலறிதல்” ஒரு நல்ல சொல்லாக்கம்! எப்படி “சூல் புகுந்து பால்” அறிகிறார்கள் என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்!

    பிராமணர்களைப் போலவே பிற சாதியினரும் ஜாதகப் பொருத்தம் அதிகம் பார்க்கிறார்கள் என்பது என்னளவில் செய்தி தான்! தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்.

    என்றென்றும் அன்புடன்
    பாலா


  8. பெட்டிக்கடை நண்பரே,

    நல்ல பதிவு! எழுதும் பாணி ரசிக்கத்தக்க வகையில் உள்ளது. தங்கமணி கூறியது போல “சூல்புகுந்து பாலறிதல்” ஒரு நல்ல சொல்லாக்கம்! எப்படி “சூல்புகுந்து பால்” அறிகிறார்கள் என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்!

    பிராமணர்களைப் போலவே பிற சாதியினரும் ஜாதகப் பொருத்தம் அதிகம் பார்க்கிறார்கள் என்பது என்னளவில் செய்தி தான்! தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்.

    என்றென்றும் அன்புடன்
    பாலா


  9. //ஜோதிடத்தால் ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களுக்கு என்ன பயன் என்று இது வரை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை !//

    என்ன இப்படி கேட்டுட்டீங்க… நிறைய உண்டு.

    உங்களுக்கு அஞ்சலில் எழுதுகிறேன். எஸ்.கேவின் பதிவை பிரச்சார களமாக்க வேணாம் 🙂


  10. சூல் புகுந்து பாலறிதள்: 1.கருவிற்கு 6 வாரம் முடிந்தபின், ஒலிகதிர் செலுத்தி படம் பார்க்கும் போது, குறிகள் காண முடிந்தால் பால் சொல்வது
    2. திரவம் எடுத்து “karyotyping”முறையில் க்ரோமோசோம்களை கொண்டு பால் என்ன வென்று சொல்வது என்ற இரண்டு முறை உண்டு. பின்னது அதிக கவனத்திடன் செயல் படவேண்டும். முன்னதில், கருவில் உள்ள குழந்தை கால் மாற்றி இருந்தால் சொல்வது கடினம்.


  11. எனக்கு இந்த ஜாதகத்தின்மேல் நம்பிக்கை இல்லை. தற்போது நல்ல நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். எனவே எதிர்காலத்தில் இந்த ஜாதகப் பிரச்னை இருக்காது என நம்பலாம். ஜாதகத்தை தமக்கு சாதகமாக்க ஒரு கும்பல் அலைகிறது. எத்தனையோ பேருக்கு காலம் கணிக்கும் ஜோதிடர் எப்ப சாவார்னு அவருக்கே தெரியாது! முன்னர் நான் படித்த ஹைக்கூ கவிதை ஒன்று ஈர்த்தது. நாளைக்கு வெளிநாடு பறப்பாய்.. சீட்டெடுத்துக் கொடுத்த கிளி கூண்டுக்குள்ளே என்பதுபோல இருக்கும்!

Comments are closed.