‘புத்தகப் பரண்’ வகைசார்ந்த இடுகைகள்

நங்கை மடவன்னம்

புத்தகப் பரண் :: மறுமொழி ஒன்று »

vaduvur duraisamy iyengarஅந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், காண்போர் மனத்தைப் பிரமிக்கச் செய்து மயக்கும் தன்மையனவாயும், அமைந்திருந்தன. அவளது மேனி தகத்தகாயமாய் மின்னும் சுவர்ணச் சாயல் உடையதாகவும், தாமரை, ரோஜா முதலியவற்றின் மிருதுத் தனமையும் புதுமையும், செழுமையும் கொண்டதாயும் காணப்பட்டது. இரதி தேவியோ, தெய்வ ரம்பையோ என எவரும் ஐயுற்றுக் கலங்கி உருகும்படி, மக அற்புதமான சிருஷ்டியாய் அமைந்திருந்த அந்த வடிவழகியின் சிரத்தில் நீண்டு கருத்து அடர்ந்து மினுமினுப்பாய் காணப்பட்ட அளகபாரம் கண்கொள்ளாத எழிலாய் விளங்கியது. அவளது முகார விந்தத்தைக் காணும்போது எல்லாம், கபடமற்ற மாடப் புறாவின் முகமே எவர் மனத்திலும் நினைவுக்கு வரும். அந்த முக மண்டலத்தில் இருந்து ஜ்வலித்த அற்புதமான காந்த சக்தி எந்த இடத்தில் ஒளிய வைக்கப்பட்டிருந்தது என்பது அவளைப் படைத்த பிரம்மாவுக்குக் கூட தெரியுமோ, தெரியாதோ என்று நாம் நிச்சயம் ஐயுறலாம்.

அந்த மடவன்னம் அவளது தாயின் கர்ப்பத்தில் ஒளிந்திருந்த காலத்தில் எந்தத் தெய்வம் கூடவே மறைந்திருந்து அளவுகளை எடுத்து வசீகர சக்திகளை அமைத்து, அத்தகைய அற்புத உருவைச் சிருஷ்டித்து உதவியதோ, எதற்காக அந்தத் தெய்வம் மறைந்திருந்து அப்படி அரும்பாடு பட்டதோ என்று எவரும் கருதி பிரமித்து மயக்கும்படி அந்த மாதரசியின் வடிவம் அமைந்திருந்தது. வில் போல வளைந்து அடர்த்தியான புருவ ஜதையும், காதளவோடிய கலகக் கண்களும், அமிர்தம் கசிந்த குங்கும நிற இதழ்களும், முகத்தைப் பழித்த பற்களும், மார்பில் கம்பீரமாய் விம்மி நிமிர்ந்து குவவி நின்ற சக்கரவாள மிதுனமும், சரிந்து குறுகிய துடி இடையும், கான்போர் உயிரைக் குடித்த தொடை, பின் தட்டு ஆகியவற்றின் சாமுத்திரிகா லட்சண அமைப்பும், புஷ்ப இதழின் மிருத்தன்மையையும், தந்தக் குச்சிகளின் தோற்றத்தையும் கொண்டிருந்த கை விரல்களும், ஒன்றுகூடி சதா காலமும் கோடிக்கணக்கில் மன்மத பாணங்களை எய்தபடி இருந்தன. ஆதலால் அந்த இன்பவல்லியைக் காணும்போது பஞ்சேந்திரியங்களும் ஒரே நொடியில் கலங்கிக் கலகலத்து நெக்குவிட்டுப் போமென்று திண்ணமாய்க் கூறலாம்.

எப்படி இருக்கிறது வர்ணனை! மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 1050 முறை) ::

பொஸ்தகக் கண்காட்சி – 2009

புத்தகப் பரண் :: 3 மறுமொழிகள் »

இந்த வருஷம் கொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம்.

அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி டைப்பில் கூட!

ஓலைச்சுவடி என்றும் ஒரு புத்தகம் நிறைய விற்றுக் கொண்டிருந்தது – ”தளியோலா” என்னும் மலையாளப் புத்தகத்தின் தமிழாக்கம்.

சே கவேராவும் நிறைய கண்ணில் பட்டார். அவரைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள் கூட அந்த மீமில் ஆட்பட்டிருந்தனர்!

நான் நேரம் (சில இடங்களில் பணமும்) செலவிட்ட ஸ்டால்கள்:

ரிசர்வ் வங்கி
பி.எஸ்.என்.எல்
கீதா பிரஸ்
தினமணி
சென்னை பல்கலைக் கழகம்
விஜயபாரதம்
நிவேதிதா பதிப்பகம்
Asian Educational Services (அபிதான சிந்தாமணி)
இன்னும் சில…

பளிரென்று கண்ணைப் பறிக்கும் விதமாக நூல்களை வடிவமைத்து அளிப்பவர்கள் (நான் பார்த்தவரை):

கிழக்கு (வரம்…etc)
ஆனந்த விகடன்
உயிர்மை
இராமகிருஷ்ண மடம்

மற்றபடி ஒரே மாதிரி ஸ்டால்கள். ஒரே மாதிரி புத்தகங்கள்.

மூன்று மணி நேரத்திற்குமேல் சுற்றிவிட்டு ஒன் பாத்ரூம் போகலாமென்றால் கண்காட்சிக்கு வெளியே வந்து காடு மலை வனாந்திரமெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நல்ல வேளை அப்போது மழை பெய்யவில்லை.

நான் சென்றது திங்கட்கிழமையாதலால் ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் கேண்டீனில் நல்ல கூட்டம் (குட்டி இட்லி, பானி பூரி, ஃப்ரெஞ்ச் ஃபிரை, தோசை, போளி, ஃபிரைடு ரைஸ்…). கால் அசந்து உட்காரலாமென்றால் நாற்காலி ஏதும் காலி இல்லை. ஆள் இல்லாத இருக்கைகளில் கூட பைகளைப் போட்டு இடம் பிடித்துவிட்டு டோக்கன் வாங்கச் சென்றிருந்தனர் ஆண்கள்; பெண்கள் அனைவரும் இருக்கை நிறைந்து அமர்ந்திருந்தனர்!

புதிய தமிழ் ஒன்றை கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் அறிஞர் ஒருவர் அளிக்கும் சொற்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். அவைகளின் பொருள் புரிந்து எனக்குச் சொன்னால் உங்களுக்கென்று மலிவு விலையில் 5 ரூபாய்க்கு புத்தகக் கண்காட்சி நுழைவுச் சீட்டு ஒன்று கிடைக்கும்.

பொத்தக வியந்தை
தளி
படி
வாழ்வரை

இப்போது காட்சிகள் இரண்டு:

சந்தை பற்றிய விவரங்களும் சொல்வளமும் செறிந்த இன்னொரு கட்டுரை இங்கே. (சேதுபதி அருணாசலம் எழுதியது)

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 947 முறை) ::

குதிரைக் கொம்பு

புத்தகப் பரண் :: 3 மறுமொழிகள் »
ஒரு விநோதக் கதை

ஆக்கியோர்: மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் (1935)


ரீவணன்

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.

கேளீர், ரீவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.

இதைக்கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-

இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.

அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 783 முறை) ::

அபிதான கோசம்

புத்தகப் பரண் :: 2 மறுமொழிகள் »

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது "அபிதான கோசம்" என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர், "Asian Educational Services" நிறுவனத்தினர்.

அபிதான கோசததின் விவரத் தொகுப்பு:-

இது
யாழ்ப்பாணத்து மானிப்பாய்
ஆ. முத்துதம்பிபிள்ளையால்
செய்து,

இலங்கை இராஜ்மந்திர சபை
அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி
ஸ்ரீமான். பொ. குமாரசாமி முதலியாரவர்களுடைய
வித்தியாபிமான ஞாபகச்சின்னமாகச் சமர்ப்பித்துப்
பிரகடனஞ் செய்யப்பட்டது.

இந்நூலை ஆக்கியோரான முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம், நாவலர் தோட்டம் முகவரியிட்டு எழுதியுள்ள முகவுரை இவ்வாறு தொடங்குகிறது:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 1149 முறை) ::

புத்தகப் பரண்

புத்தகப் பரண், பொது :: மறுமொழி இனிமேல்தான் »

சென்ற புத்தகக் கண்காட்சியில் நான் (நானும்!) சில புத்தகங்கள், குட்டி நூல்கள் வாங்கினேன் (நாள் காட்டிகள், விளமபர நோட்டீஸ்கள், விலைப் பட்டியல்கள் தவிர..). புத்தகங்களைக் கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை, ஒரு முறை அவற்றை முகர்ந்து பார்ப்பதுதான். இது பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தை கீவளூரில் புத்தகக் கடை வைத்திருந்தபோதிலிருந்து தொடர்ந்து வரும் பழக்கம் (சுற்றுவட்டாரத்திலிருக்கும் பல ஊர்களுக்கு புத்தகக்கடையாக எங்களுடையது ஒன்றுதான் இருந்தது. நிகரலாபம் குறைவு என்பதால் பலர் இந்தத் தொழிலில் அப்போது ஈடுபடுவதில்லை). காகிதம், அச்சு மை, வார்ணிஷ் எல்லாம் சேர்ந்து அளிக்கும் ஒருவித வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிறகு முதல் பக்கத்தில் பெயர், தேதி, ஊர் முதலியவற்றை குறிப்பது (Metadata of ownership). மிகவும் பிடித்த ஆசிரியருடையதாயிருந்தால் "பொக்கிஷம்" என்றெல்லாம் எழுதி வைப்பேன்!

சரி. பிறகு? படிப்பதில்லையா? அங்குதான் ஒரு சைத்தான் வந்து தன் விஷமத்தை காண்பிக்கும். ஒரு பிரட்டல் பிரட்டிவிட்டு, "நம்முடைய புக்குதானே, எங்கே ஓடிப்போகப் போகுது; சாவகாசமாகப் படித்துக்கொள்ளலாம்" என்று சோஃபா, படுக்கை, கணிப்பான் உறைவிடம், (கழிப்பான் தனியிடத்தில் கூட சில சமயங்களில் :) ), நாற்காலி (எங்கள் கிராமத்தில் புதிதாக ஒரு நாற்காலி செய்து வந்த போது, முத்லில் அதில் வீற்றிருக்கும் பாக்கியம் செய்த வஸ்து ஒரு தவிட்டு மூட்டை – ஆனால் நான் முன்னேறிவிட்டேன். இப்பொதெல்லாம் அதன்மேல் புத்தகம், நோட்டு, குறுந்தகடு, பஜ்ஜி வைத்த தட்டு, காப்பி கோப்பை இவைதான் வீற்றிருக்கின்றன) என்று "கராத்தே" போல் அல்லாடிக் கொண்டிருக்கும்.

புத்தகங்களின் அடுத்த நிலை "பரலோகம்"தான்! அதாவது "பரண் லோகம்". "லாஃப்ட்"கள் எதற்கு இருக்கின்றன? சிறிது நாட்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு அந்துருண்டை சகிதம் புதுக் கருக்குக் குறையாமல் மேலேறிவிடும். இப்படி அடுக்கி வைத்து அப்படியே நினைவிலிருந்து அகற்றியவைகள் அநேகம். உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு எம்பலில் கைக்கெட்டுமாறு வைக்கப்பட்டிருந்தால்தான் புத்தகங்கள் படிக்கப்படும். ஏழுகடல், ஏழு ஏணி தாண்டி எடுக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அவை "எழுத்தாணிப்பூச்சி'க்குத்தான் எடுப்புச் சாப்பாடாகும். அன்பர் ஹரி கிருஷ்ணன் அப்படித்தான் ஒருமுழ தூரத்தில் தன் பாரதி பற்றிய நூல்களையும் தொல்காப்பியத்தையும் "ரேக்"கியிருக்கிறார். ஏதேனும் கேள்வி கேளுங்கள். மூன்று நிமிடங்கள்தான் அவருடைய பதில்பெறும் நேரம் (SATA வண்தகடு வேகத்தில் செயல்படுவார்).

சில நாட்களுக்குமுன் இணையத்தில் சிலர் ஒரு படர்ச்சி இழையைத் (meme) தொடங்கினார்கள். "மீம்" என்றழைக்கப்படும் இந்தச் சொல் பலர் கையில் மாட்டிக்கொண்டு மிம்மி, கும்மி என்று வெம்மிக் கொண்டிருந்தது சில காலம். மெறியம் வெப்ஸ்டர் அகராதியிலிருந்து இந்த சொல்லின் சரியான உச்சரித்தல் அறியவேண்டின் இந்த சுட்டியை சிமிட்டினால் கேட்கலாம்! அந்த இழை ஓடிக்கொண்டிருக்கும்போது சில பாசாங்குசர்கள் புத்தகக்கடைப் பட்டியலில் கண்ட அனைத்து நூல்களையும் படித்துவிட்டதாக மளிகைக் கடை "ரோக்கா" போல அட்டவணையிட்டு "மெத்தப் படித்தவர்களாகி" அகமகிழ்ந்தனர் (உண்மையிலேயே தான் படித்த புத்தகங்களின் பெயர்களைப் பகிர்ந்து கொண்டவர்களை நான் பழிக்கவில்லை).

ஐயோ பாவம் ஆண்பால்சரி. நான் ஏதாவது படித்தேனா இல்லையா? அவசரப்படாதீர்கள். இப்போது கிடைத்துள்ள நீண்ட வாரமுற்றில் எத்தையாவது வாசித்துவிடவேண்டுமென்ற உறுதியுடன் நான் எடுத்துக் கொண்ட புத்தகம் வெறும் 160 பக்கங்களைக் கொண்ட நோஞ்சான். ஏனெனில் இப்போதுதான் டேவ் பேர்ரி எழுதிய ஆண்மகர்களின் அதீத குண விசேஷங்களைப் பற்றிய புத்தகத்தைப் படித்து சிரித்து, பின் ஒரு பதிவும் போட்டு முடித்துள்ளேன்.

அப்படி நான் படித்துக் கிழித்த தமிழ்ப் புத்தகம்தான் என்ன? நாளைவரை பொறுங்கள். இப்போது சுடச்சுட "மோர்க்கூழு" அழைக்கிறது!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 1144 முறை) ::

 

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 48 access attempts in the last 7 days.