துளித்துளி

உண்மையும் பொய்யே
உடல்வெறும் பையே!

சென்னை

0

இந்த இடம் ஆவார்ப்பேட்டையில் மாண்புமிகு ஸ்டாலின் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கிறது. நீல்கமல்காரர்கள் குப்பைத்தொட்டியை எங்கோ தூக்கியெறிந்து விட்டார்கள். இடம் நாறிக் கொண்டிருக்கிறது.

2

அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே "புர்"ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் அவர்கள் ஜேபியில் என்ற மனப்பன்மை மேலோங்கி நிற்பதால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள்!

அதிருக்கட்டும். இப்போது என் கதைக்கு வருகிறேன். வெகு நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து என்னருகில் நின்றது. ஓட்டுனர் என்னை நிமிர்ந்து பார்த்தார். "ஆகா, என்னே என் பாக்கியம்!" என்று மகிழ்ந்து நான் செல்லுமிடத்தை மரியாதையுடன் கூறினேன். தலையை இரண்டு மில்லிமீட்டர் அசைத்தார். இது போதாதா!

ஆனால் உள்ளே அமர்ந்த பிறகுதான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.

ஆமாம். நான் கண்டவரையில் பிரயாணிகள் அமரும் இருக்கைக்கு எதிரே ஒரு இரும்பு கம்பியோ, சட்டமோ, பிளேட்டோ போட்டிருப்பார்கள். ஏறும்போதே நம் முழங்கால்ளைப் பதம் பார்த்துவிடும். ஓடும்போது மற்ற குலுக்கல்களில் இது தேவலை என்றாகிவிடுவது வழக்கம்.

ஆனால் அந்த ஆட்டோவில் முழங்கால் இடிக்குமிடத்தில் குஷன் வைத்து ரெக்ஸின் போட்டு திண்டு மாதிரி அமைப்பு இருந்தது. "தோடா!" – என்ன கலி முத்திப் போச்சா, ஆட்டோக்காரரெல்லாம் பிரயாணிகளின் சுகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டனரே! ஆச்சரியம் தாங்காமல் அந்த ஆட்டோக்க்காரரை சிலாகித்து பாராட்டினேன். அவர் உடனே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.

"சார், ஒரு கொயந்த சார். பாவம் சார். முனாடி ஒரு பேமானி சடன் பிரேக் போட்டுட்டான் சார். இன்னா பண்றது, நானும் அடிச்சேன். பாவம் சார். கொயந்த சார். முழங்கால் பேந்து ரத்தமா கொட்டிச்சு சார். ஆசுபத்திரிக்கி இட்டாந்தேன் சார். பாவம் சார் கொயந்தெ சார். அதுக்கப்பரம்தான் குசன் போட்டேன். பாவம் சார், கொயந்தெ சார்."

அவர் கண்கள் கலங்கி இருந்தன.

நான் இறங்கி பணம் கொடுத்தபோது எண்ணிக்கூடப் பார்க்காமல் அந்தக் குழந்தையையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார், அந்த பண்பாளர்!

இவர்களால்தான் இன்னும் மழை பெய்கிறது!

0

அவர்களுக்கு
கடல்தான் அன்னை.
கடல்தான் வாழ்வு
கடல்தான் வயிற்றை நிரப்பும்
அட்சய பாத்திரம்
ஆனால்
அந்தக் கடலே
கணக்கற்றோருக்குக்
காலனானான் நேற்று.

"ட்சூனாமீ" என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்!

ட்சூனாமீஜப்பானிய மொழியில் எழுதினால் நெற்றியில் தரிக்கும் நாமம் போன்றதொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த பிரளய காலத்துப் பேய், கபந்தன் போல் கடற்கரையோரத்தில் கண்டவரையெல்லாம் கவர்ந்து கபளீகரம் செய்து விட்டது.

இதோ காண்கிறீர்களே அதுதான் இரு கீற்று ஜப்பானிய மொழி ட்சூனாமீ. "ட்சூ" (துறைமுகம்), "னாமீ" (அலை). அதாவது கடற்கரையையும் துறைமுகங்களையும் தாக்கும் ராட்சஸ அலைகள் எனப் பெயர் கொள்ளலாம்.

இவை ஒன்றன்பின் ஒன்றாக மலைபோல் எழக்கூடிய பேரலைகள். கடலடித் தரையின் கீழ் நிகழும் நில அதிர்வுகள், பொங்கி யெழும் எரிமலைகள், நடுக்கங்கள் தவிர, பூமியில் தாக்கும் எரி விண்மீன்கள் மற்றும் வான் கற்கள் இவைகளாலும் இந்த ட்சூனாமி என்கிற பொங்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கி உயிருக்கும், பொருளுக்கும் பெருத்த சேதத்தை உலகமெங்கும் பற்பல கால கட்டங்களில் விளைவித்து வருகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

http://www.pbs.org/ என்ற வலைத் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் Flash Animations-களை இங்கு காணலாம். இவற்றை நீங்கள் உங்கள் உலாவியில் (browser) காணவேண்டுமானால் Shockwave Flash Plug-in என்கிற உள்ளீட்டு நிரலி தேவைப்படும். சாதாரணமாக எல்லா உலாவிகளிலும் இது உள்ளடக்கம் என்றாலும், தேவைப் பட்டால் இந்த வலை உரலுக்குச் சென்று அந்த குட்டி சொவ்வறையைப் பெற்று அதனை அதன் செய்முறைப்படி உலாவியினுள் இட்டடபின் அந்தக் குறும்படங்களைக் காணலாம்.

ஆழ்கடலின் அடியிலமைந்த நிலமங்கையின் பாதங்கள் (oceanic plates or tectonic plates), கண்டங்களின் எல்லைகளின்பால் அமைந்த பாளங்களினூடே சொறுகிக் கொள்வதால் (slip under continental plates), ஒருவித "தப்புப் பாளங்கள்" (faults) ஏற்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டு, ஆழ்கடல் நிலத்தின் ஒரு பகுதி மேலெழும்பி, அதன் மேலுள்ள நீர்ப்பகுதியையும் திடீரென்று தூக்கி எம்பச் செய்கிறது. கடலின் நிகழும் "ட்சூனாமீ" என்கிற இந்த பௌதிக மாறுபாடு முதலில் சாதுவாகத் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் மணிக்கு 800 கி.மீ வரை வேகம் கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பரப்பில் பாய்ந்து சென்று கரை கண்ட இடமெல்லாம் தாக்கிச் செல்கிறது. இந்த சைத்தானுக்கு கரைகளைக் காண்டால் வெறி பிடித்துவிடும். கடலின்பால் லேசாக எழும்பிப் பயனம் செய்யும் ட்சுனாமீ கரையைக்கண்டால் 30-40 மீட்டர்கள் உயரம் வரை எட்டி கரையை ஒரு நீராலான மலைபோல் தாக்குகிறது. இதிலிருந்து தப்புவது மிகக் கடினம். சென்னையைத் தாக்கிய ட்சூனாமீ சுமார் 10-15 அடி உயரம் வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.

கடற்கரையோரங்களில் அமைந்த நிலப் பகுதிதான் (ridge) இந்தத் தாக்குதலைத் தாங்கி, ஊருக்குள் அலை அடிக்காமல் காக்க வேண்டும். ஆனால் ஊரே கரையின் மேல் இருந்தால்?

அதுதானே இங்கு நிகழ்ந்தது!

சரி, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?