துளித்துளி

விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே! — பாரதியார்

கர்நாடக இசை

10

என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”

ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!

Priyankaஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!

அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?

இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.

என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இசை :: நாள்: . 10 மறுமொழிகள்#

0

GNB practicing at homeஇந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.

மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.

இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (SAFE) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.

இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இசை :: நாள்: . மறுமொழி இடுக#

0

எம்.எஸ்.சௌந்தரம்எம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய இப்புத்தகத்தில் பாசாங்கில்லாத எளிய நடையில், உள்ளது உள்ளபடி அவர் காலத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் விவரமாக எழுதியுள்ளார் அந்த அம்மையார். நூல்நிலையத்தின் தூசி படிந்த புத்த அடுக்குகளினூடே இடுக்கில் பதுங்கியிருந்த இந்த சிறு நூல் மூலம் கர்நாடக இசையைப் பற்றி மட்டும் இல்லாமல் மனித நேயம், அக்கால வாழ்க்கையின் கூறுகள் ஆகியவற்றை அறிய முடிகிறது.
மேலும் வாசிக்க…

0

மறைந்த கர்நாடக இசை மாமேதை ஜிஎன்பி அவர்கள் சகுந்தலை திரைப்படத்தில் பாடியுள்ள நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இந்த காம்போதி ராக விருத்தத்தைக் கேட்டு மகிழுங்கள்!

இந்தத் திரைப்படத்தில் ஜிஎன்பி அவர்களுடைய குரல் வளம் முழுதும் வெளிப்படாமல் தடுக்க நிகழ்ந்த பல சதிகளைக் கடந்து, இந்த ஒரு பாடலிலேயே அவர் தன் இசையின் வீச்சை வெளிக்கொணர்ந்திருப்பதைக் காணலாம்.


YouTube - வீடியோவைக் காணுங்கள் GNB

சார்ந்த வகை: இசை :: நாள்: . மறுமொழி இடுக#

4

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!

மாம்பலம் சகோதரிகள்இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.

ஜி.என்.பாலசுப்பிரமணியம்தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இசை :: நாள்: . 4 மறுமொழிகள்#

4

என் ஆங்கிலப் பதிவில் Podcasting சோதனை முயற்சிக்குப் பிறகு இங்கு ஒரு பாடலை ப்ளாஷ் (Flash) முறையில் பதிவிலிருந்தே கேட்க ஒரு நிரல் மூலம் முயற்சிக்கிறேன்.

இந்த பஜனைப் பாடலில் வாதிராஜஸ்வாமி "பேக பாரோ, பேக பாரோ" (சீக்கிரம் ஓடி வா) என்று கிருஷ்ணனை அழைக்கிறார். மாண்டு ராகம் மற்றும் ஆதி தாளத்தில் அமைந்த இந்தப் பாடலை விறுவிறுப்பாக, ப்ருகாக்களுடன் பாடியவர்கள் பிரபல கர்னாடக இசை இரட்டையர்கள் "மாம்பலம் சகோதரிகள்". கேட்டு மகிழுங்கள்.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

சார்ந்த வகை: இசை :: நாள்: . 4 மறுமொழிகள்#

1

சிறு வயதில் ரேடியோதான் எனக்கு நெருங்கிய துணை. எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் – முதலில் Texla பிறகு Bush – இரவு நேரங்களில் கர்னாடக சங்கீதம் தான் குத்தகை – அதிலும் செம்மங்குடி போன்ற மூக்கு வித்வான்கள்தான் ”நீ இழு, நான் இழு” என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள், நீர் வற்றிக் கொண்டிருக்கும் குட்டையின் சேற்றில் படுத்து சொர்க்கத்தை அநுபவிக்கும் எருமை மாட்டின் "கொய்ங்" போல! இந்த சங்கீதக் காரர்களுக்கு அநாவசியமாக வாய் வேறு எதற்கு – மூக்கு ஒன்றே போதுமே என்று நான் பல முறை என்ணியிருக்கிறேன்.எம்.எஸ் என் அம்மாவிடம் "இப்படி இழுத்து இழுத்து பாடுவதுதான் சங்கீதமா? ஏன், இனிமையாகப் பாடக் கூடாது என்று ஏதாவது இலக்கணக் கட்டாயமா?" என்று கேட்கும்போதெல்லாம், "டேய், ஜிஎன்பி, எம். எஸ் – இவங்களைக் கேட்டுப்பார்டா. அது தாண்டா சங்கீதம்" என்று பதில் சொல்லுவார். அப்போதிலிருந்தே அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்கள் போல் நானும் எம்.எஸ் பாடல்களைக் கேட்டு அந்த இசையின்பத்தை அநுபவித்து வருகிறேன்.

சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகப் பிரும்ம ஆராதனைக்குச் சென்றிருந்தேன். வழக்கத்தை விட தாங்க முடியாத கூட்டம். காலையிலிருந்தே கையில் சாப்பாடு, தண்ணீருடன் கொட்டகைக் குள்ளேயே பல பெண்மணிகள் உட்கார்ந்திருந்தனர். நேரம் ஆக ஆகக் கூட்டம் கூடிக் கொண்டே வந்தது. ஆம், அன்று ஒரு சிறப்பான நாள். பல வருடங்கள் இடைவெளிக்குப் பின் அன்று தான் எம்.எஸ் அவர்கள் ஆராதனையில் பாட இருந்தார்கள்! மேடையை நெருங்க முடியாத அளவுக்குக் கூட்டம். நானும் எனக்குத் தெரிந்த தலைகள் மூலம் கிட்டத்தில் போக முற்பட்டேன். பலிக்கவில்லை. முன்னமையே முயற்சி செய்து அங்குள்ள நிர்வாகிகள் யாரையாவது சிபாரிசு பிடித்திருக்கலாமே என்று
தோன்றியது. சரி. இப்போது என்ன செய்வது? கடைசியில் அமர்ந்து கேட்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது மேடையின் அருகில் அமர்ந்து எம்.எஸ் கச்சேரியை கேட்க வேண்டும் என்கிற வெறி. மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இசை :: நாள்: . 1 மறுமொழி#

எஸ்.வி.வி-யின் "உல்லாஸ வேளை"யில் "சங்கீதப் புளுகு" பற்றி எழுதி யிருப்பார்.

கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட "ஸ்டிரைட் ட்ரைவ்", "கவர் ட்ரைவ்" என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனால் தலையை உருட்டி, தொடையைத் தட்டி, மேலும் தன் கைகளையோ அல்லது தாம் அமர்ந்திருக்கும் சேர் மேலேயோ உரக்கத் தட்டி, "தப்புத்"தாளம் போட்டு, தான் கர்னாடக சங்கீதத்தில் பெரிய நிபுணர் போல பீலா விடுபவர்கள் அநேகம். நீங்கள் கேட்கும் பாட்டின் இராகம் தெரியவில்லையென்றால் பக்கத்தில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் (பெரும்பாலும் அவர்கள்தான் கொஞ்சம் ஞானஸ்தராக இருப்பார்கள்) "இது என்ன" ராகம்" என்று கேட்டால் ”ஏதோ இந்த ஒரு ராகம்தான் இவருக்குத் தெரியாது போலிருக்கிறது” என்று நினைத்துக் கொள்ள சான்ஸ் இருக்கிறது. ஆனால் நீங்கள் கல்யாணி, சங்கராபரணம், காம்போதி போன்ற ராகங்கள் பாடப்படும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் சுத்த "ஞான சூனியம்" என்று சந்தேகமில்லாமல் தெரிந்துவிடும் அபயம் இருக்கிறது!

இதைத் தவிர்க்க என் நண்பரொருவர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். திடீரென்று, "இது பேகடாவா, தர்பாரா" என்று கேட்பார். பக்கத்தில் இருப்பவர் தலையில் அடித்துக் கொண்டு, "ரெண்டுமில்லை, கீரவாணி" என்றால், "ஒஹோ, அதான் கொஞ்சம் சாயல் அடிக்கிறதே-ன்னு பாத்தேன்" என்பார். இதனால் அவர் ”இது ஒரும் வெத்து "ஃபிலிம்" கம்பெனி. சும்மா பந்தா காட்டுது” என்று நினைத்துக் கொண்டாலும், பக்கத்தில் இருக்கும் மக்கள், ”ஆஹா, இவ்வளவு ராகத்தின் பெயரெல்லாம் இவர் தெரிந்து வைத்திருக்கிறாரரே" என்று நினைக்கலாமல்லவா. அதற்குத்தான் இந்த டுபாக்கூர் வேலை.

இப்படியும் சிலபேர்!