இந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். பங்கு மார்க்கெட் புள்ளி 20,000-த்தைக் கடந்தது. ஆகா நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இந்தியா வளம் பெற்றுவிட்டது! இந்த செய்திகளையெல்லாம் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, கையில் ஆவி பறக்க சுடுசுடு பஜ்ஜியை கடித்துக் கொண்டே கேட்டுவிட்டு ஒருவருக்கொருவர் கைகுலுக்க்கிக் கொண்டோம்!
உண்மையில் நம் நாட்டில் அத்தனை சுபிட்சம் நிலவுகிறதா?
பங்கு மார்க்கெட் குறியீடு 20,000-த்தை தாண்டிய அதே நாளில் 20,000 ஏழைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து தலைநகர் புதுடில்லி வந்து தர்னா செய்திருக்கிறார்கள்.
அவர்கள் வேண்டியது என்ன? பல காரணங்களுக்காக அரசு கையகப்படுத்திய நிலம் திரும்ப வேண்டும். அவர்களுக்கு ஜீவனத்திற்கு வேறு ஒன்றுமே கிடையாது. முழுப் பட்டினி. ஆம் பட்டினி! பட்டினி, பசி இதற்கெல்லாம் நமக்கு - நன்கு தின்று கொழித்து கொலெஸ்டிராலைக் குறைக்க காலையில் சோம்பலோடு நடை பழகுகிறோமே அந்த நமக்கு - என்னவென்று தெரியுமா?
நம் நாட்டில் இன்னமும் பல கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள். அரசியல்வாதிகளைக் கேளுங்கள். ஏழைகளின் துயர் தீர்க்க அவதாரமெடுத்தவர்கள். உணர்ச்சி பொங்க வீராவேசத்துடன் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, காரில் பவனி வந்தபின் கைத்தடிகள் படைசூழ விமானமேறிச் சென்று விடுவார்கள். பிரச்னை தீர்ந்ததா!
இரெயில் வண்டியில் நெடு தூரம் பயணம் செய்திருக்கின்றீர்களா? வண்டியில் கொடுக்கப்படும் உணவை நீங்கள் சாப்பிட்டபின் அதில் ஒட்டியிருக்கும் எச்சில் உணவுத் துண்டுகளை வழித்து உண்ணும் ஏழைச் சிறுவர்களைப் பார்த்திருக்கிறீர்களா! இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. வயிற்றை என்னமோ செய்கிறது.
என்று விடியும் இது போன்ற ஏழைகளுக்கு!
குறிச்சொற்கள்: இந்தியா, ஏழ்மை, பசி, India, poor


![Validate my RSS feed [Valid RSS]](/wp-images/valid-rss.png)
சமீபத்திய மறுமொழிகள்