மறைக்கப்படும் உண்மைகள்

2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் “விஜில்” அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் கேட்கலாமென்றுதான். ஏனென்றால் அவரை நான் இதுவரை நேரில் கண்டதில்லை; தொலைக்காட்சியில்தான். அவர் ஒரு காமெடியான அரசியல்வாதி, சுவாரசியம் மிக்கவர். எனதான் சொல்கிறார் பார்ப்போமென்னும் ஆர்வம்.

அரங்கின் வாயிலில் அமைப்பாளர் திருமதி. இராதாராஜன் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். ஆங்கேயிருந்தோரிடமிருந்து அறிந்து கொண்ட செய்தி, கடைசி நிமிஷத்தில் சுவாமியும், இரதாகிருஷ்ணனும் வரமறுத்துவிட்டார்களென்பதுதான். பாவம், அரசியல்வாதிகளுக்கு பலவித சோலிகள் இருக்கும். நம்மூரில் அரசியல் என்பது நேர்க்கோட்டு சிந்தனை வயப்பட்டதன்று. இணைவு, பிரிவு, பின் பிணைவு இப்படி பன்னோக்குப் பார்வையில் போய்க் கொண்டிருக்கும். சிறுவர்கள் கையில் வைத்து உருட்டிப் பார்க்கும் “கலைடாஸ்கோப்”பில் எப்படி விதவிதமாக வண்ணக் கோலங்கள் மாறிவருகிறதோ அதுபோல்தான் அரசியல் வியூகங்களும்!

முக்கிய பேச்சாளர்கள் வரவில்லையே, என்ன செய்யலம் என்று அமைப்பாளர்கள் யோசித்திருக்கும் வேளையில் வந்திருந்தோர் அனைவரும் அந்த அரசியல்வாதிகள் இருவரும் இல்லாமலேயே கூட்டத்தை நடத்துங்கள் என்று ஒருமித்துக் கேட்டுக் கொண்டதால் கூட்டம் தொடங்கியது.
திருமதி ராதா ராஜன் லலித் கலா அகாடமியில் அவுரங்கஜீப் பற்றிய படக் கண்காட்சியில் நிகழ்ந்த அராஜகங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் கூறியவற்றில் என் நினைவிலிருப்பவை:-

  • உதவிக் கமிஷனர் முரளி சட்டத்திற்குப் புறம்பாக மூன்று பெண்களை இரவில் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார். அந்த நிகழ்வும், வலுக்கட்டாயமான கண்காட்சி முடுதலும், படங்களை உடைத்ததும் மேன்மை தங்கிய ஆற்காடு நவாப் அங்கு வந்து சென்றபின்தான் நடந்திருக்கின்றன.
  • உதவிக் கமிஷனர் திரு. முரளி முன்பு கோவையில் நடந்த கலவரங்களின்போது அங்கு பணியாற்றியவர். அவருக்குத் தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்துவருகிறது.
  • காவல் ஆணையருக்கும், டிஜிபிக்கும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக முரளி இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார் என்பது ஆணையரிடம் நான் பேசியதிலிருந்து தெரியவந்தது.
  • ஆற்காட்டு நவாபுக்கு ஒவ்வொரு ஆண்டும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பூரணகும்ப மரியாதை அளித்துவருகிறார்கள். அந்த நேரத்திலெல்லாம் தவறாமல் “எங்கள் முன்னோர்கள்தான் இந்தக் கோயிலின் தெப்பக்குளத்திற்கு நிலத்தை வழங்கனார்கள்” என்று பெருமையடித்துக் கொள்கிறார். நான் கேட்கிறேன், “இந்த நிலத்தை உங்கள் முன்னோருக்கு கொடுத்தது யார்? இது எங்கள் பூமியில்லையா?” இது ஏன் நம் மக்களுக்குப் புரியவில்லை?
  • இந்த ஆற்காடு நவாப் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார், பழைய சரித்திர நிகழ்வுகளைப் பற்றிப் பேசக்கூடாது என்றும் அதனால் மத நல்லிணக்கம் கெட்டுவிடும் என்றும். அவரும் நானும் முன்பு ஒரு முறை ஒரு அமேரிக்க தூதுக்குழுவுடன் நேர்காணலில் பங்கெடுக்கும்போது, “நான் பாப்ரி மஸ்ஜித்தை பற்றிப் பேசுவேன்” என்று மேஜையில் அடித்து ஓங்கிப் பேசினார். அவருக்கு பாப்ரி மஸ்ஜித்தைப் பற்றிப் பேச உரிமையுண்டென்றால் அவுரங்கஸீபைப் பற்றியும் பேச எனக்கும் அதே உரிமை உண்டு.
  • மன்னர் மானியங்களும், பட்டங்களும் அனைத்து முன்னாள் மன்னர்களுக்கும் நிறுத்தப்பட்ட போதிலும், இவருக்கு மட்டும் இன்னமும் நவாப், இளவரசர் போன்ற பட்டங்களைத் தரிக்க ஏன் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.
  • ஜம்மு கஷ்மீருக்கு என்று தனி அரசியமைப்புச் சட்டம் (constitution) இருப்பது உங்களுக்குத் தெரியுமா? பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்து ஜம்முவில் குடியேறினவர்கள் இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க இயலுகிறது. ஆனால் அவர்கள் ஜம்மு கஷ்மீர் மாநிலப் பிரஜகளாக ஆக முடியாது. அங்கு தேர்தல்களில் பங்களிக்க இயலாது.
  • இதற்கெல்லாம் மேலாக ஒரு வேடிக்கையான விஷயம், ஜம்மு கஷ்மீர் மாநிலம் தன் அரசியலமைப்பில் “மதச் சார்பின்மை” (secularism) என்பதையே அங்கீகரிக்கவில்லை!
  • காந்தி, “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் துவங்கியபோது அவரை சில வெளிநாடு நிருபர்கள் பேட்டி கண்டார்கள். அப்போது அவர், “இந்தியாவில் இந்து பெரும்பான்மை அரசு அமையாதவாறு நானும் என்னைச் சார்ந்தவர்களும் பார்த்துக் கொள்வோம். மேலும் இந்துக்கள் பெரும்பான்மை பெற இயலாதவாறு ஒரு கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்துவோம். முஸ்லீம் லீக் முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் இந்துக்களின் பிரதிநிதியாக ஒருபோதும் இருக்காது” என்றார். அதே நடைமுறையைத்தான் நேருவும் கடைப்பிடித்து இந்துக்களை இன்றிருக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டனர்.
  • இந்துத்துவம் என்பது இந்த பூமி சார்ந்தது. இந்த நாட்டுக்ககே உரியது. இந்திய இறையாண்மை, தேசப்பற்று, நம் இந்திய மண், எல்லை, சமூகம் இந்த எல்லா பரிமாணங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது (Indian nationhood, polity, statehood, dharma, culture, ethos et al). இதில் எதனையும் தனியாகப் பிரித்து நோக்கக் கூடாது.

அவருடைய பேச்சு, அவருடைய ஆளுமை, அவருடைய துணிவு இவையெல்லாம் காணும்போது இவர் தலைமையேற்று ஒரு சாதாரண இந்துவுக்கும் தன் மதத்தின்மேல் ஒரு மதிப்பு, பிணைப்பு, ஆர்வம், ஒரு குழு மனப்பான்மை ஆகியவைகளைத் தோற்றுவிக்க இயலுமானால் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் பொற்காலமாய்த் திகழும் என்பதில் ஐயமில்லை.

நியூஸ் டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரம் சிறப்பாக உணர்ச்சி ததும்பப் பேசினார்.

பின்னர் ஆடியன்ஸிலிருந்து ஓரு ஆர்.எஸ்.எஸ் சேவக் மிக ஆணித்தரமாக இந்து ஓட்டு வங்கியை கட்டுக் கோப்பாக அமைக்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றிப் பேசினார். பின்பு அவுரங்கஜீப் கண்காட்சியில் தொண்டராகப் பணியாறிய ஒரு பெண்மணி அங்கு நிகழ்ந்த வற்றை எடுத்துரைத்தார்.

முதலில் ஆங்கிலத்தில் உரைகள் தொடங்கினாலும் பிறகு தமிழில் தொடர்ந்தன.

கூட்டம் தொடங்கும்போது சுமார் 60 நபர்கள். முடியும் தருவாயில் 80-90 பேர் இருந்தனர். அதில் பாதி இளைஞர்கள். கடைசிவரை யாரும் எழுந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபையிலிருந்த பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். முடிவில் என் எதிர் வரிசையில் இருந்த பெண்மணி தேசிய கீதத்தைப் பாடவில்லை என்று என் அருகிலிருந்த இளைஞர் சண்டைக்குப் போய்விட்டார். அவர் மனதிற்குள் பாடியிருப்பார் என்று நான் சமாதானம் செய்யவேண்டியிருந்தது.

சுட்டிகள்:-

அவுரங்கஜீப் கண்காட்சி நிகழ்வுகள்:-

  1. ஃபாக்ட் அமைப்பு செய்தி
  2. அவ்ட்லுக் செய்தி
  3. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
  4. சுழியம் வலைப் பதிவில் படங்களுடன் செய்தி
  5. சுந்தரம் அவர்களின் கருத்துக்கள்
  6. அருணகிரியின் திண்ணைக் கட்டுரை

2 Comments


  1. miracluous today!!!
    really i consider this day as a wonderful miraculous day because i read something useful and i have not heard before about the importance.. thank you all and continue the noble work….please,

Leave a Reply

Your email address will not be published.