அது தொலைக் காட்சி இங்கு வராத காலம். வானொலிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. சும்மா திருகிக் கொண்டிருந்தபோது, இப்போது "அவதானம்" என்னும் நிகழ்ச்சி கேட்கப் போகிறீர்கள் என்ற அறிவிப்பு வந்தது. அது அஷ்டாவதானமா, தசாவதானமா என்று நினைவில்லை. இராமையா என்பவர் நிகழ்த்தினார். தொடர்ச்சியாக ஒன்றுக்கும் இன்னொனற்றுக்கும் தொடர்பு இல்லாத பல செயல்களில் அவரை ஈடுபடச் செய்கிறார்கள். அவர் அவற்றை கோர்வையாக நினைவில் இருத்தி பதிலளிக்கிறார்.
ஒருவர் அவருடைய முதுகில் ஒரு பூவை ஒத்தி ஒத்தி எடுக்கிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளின் முதலடி கூறிவிட்டு ஈற்றடி என்னவென்று வினவுகிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் கேட்கிறார். இதுபோல் பல செயல்கள். இதெல்லாம் முடிந்த பிறகு அவர் வரிசையாக பதிலளிக்கிறார். அடுத்த முறை அந்த வரிசைக் கிரமத்தை மாற்றுவார்கள்.
இத்தனைக்கும் அவர் கண் பார்வை இல்லாதவர். பிறவியிலிருந்தல்ல – இடையில் ஏற்பட்ட நோயின் தாக்கத்தால். அவருடைய மனைவியும் வந்திருந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கண்பார்வை இழப்பதற்கு முன்னால் அவர் தன்னுடைய மனைவியின் முகத்தைப் பார்த்ததை நினைவில் கொண்டு, அந்த முகத்துடனேயே அவரை இன்னமும் காண்கிறேன் என்று இராமையா அவர்கள் கூறியபோது அதனைக் கேட்டவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்தது.
முன் காலத்தில் அரசர்கள் இந்த அவதானக் கலையைப் போற்றி வளர்த்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
தற்காலத்தில் நினைவாற்றலை அதிகப்படுத்த மாத்திரைகள் வந்துவிட்டன! ஆனால் இதற்கான பிரத்யேக பயிற்சிகளை சிலர் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; விவரம் தெரியாது.
என் பக்கத்து வீட்டுப் பையன் சொல்கிறான், "இதென்னங்க ஜுஜுபி. நாங்கள்தான் ஒரொரு தேர்வுக்கும் உருத்தட்டி ஒப்பிக்கிறோமே" என்கிறான்!
சார்ந்த வகை: பொது :: நாள்: டிச 7th, 2006. 6 மறுமொழிகள்.
ஜோஸ்யம், ஜாதகம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இதைப்பற்றி முன்னமையே ஒரு இடுகை இட்டுள்ளேன். ஆனால் நம்மால் முழுதும் புரிந்துகொள்ள முடியாத சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியவில்லை.
இது பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்ததில் இவை இயற்கை நமக்களித்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே தோன்றுகிறது. பின்னால் நடக்கப் போவதை சூசகமாக நமக்குத் தெரியப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு செயலைத் தொடங்குமுன் தற்செயலாகத் தோன்றும் இடர்கள், தொலைபேசியில் தொடர்புகொள்ள முற்படும்போது தொடர்ந்து கைதவறித் தட்டும் ராங் நம்பர், ஒரு அவையில் நீங்கள் ஏதாவது சொல்ல முயலும்போது எற்படும் தடங்கல்கள் இது போன்ற பல நிகழ்ச்சிகள் நமக்கு அவ்வப்போது உங்கள் முயற்சிகளின் பயனின்மையை தெரியப் படுத்துகின்றன.
வெளிப்படையான இதுபோன்ற நிகழ்ச்சிகள் தவிர, நம் உள்ளுணர்வே பல முறை ஒரு "வருமுன் உரைப்பானா"க செயல்படுகிறது. இதனை hunch என்பார்கள். இத்தகைய எச்சரிக்கைகளுக்கு நாம் கட்டாயம் மதிப்புக் கொடுத்து அதற்குத் தக்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.
இயற்கையாக நிகழும் இத்தகைய செயல்பாட்டை "நிமித்தம்" என்று அழைப்பார்கள். இதில் மூட நம்பிக்கை ஏதும் கிடையாது. கைம்பெண்கள் குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும் என்பது போன்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளை நான் குறிப்பிடவில்லை.
முன் காலத்தில் அரசவைகளில் "நிமித்திகன்" என்று ஒருவர் இருப்பார். அரசர் முக்கிய செயல்களில் இறங்குமுன் அவர் தனக்குத் தோன்றும் உணர்வுகள் அடிப்படையில் அரசருக்கு ஆலோசனை வழங்குவார்.
இது பற்றி நண்பர்கள் யாருக்கேனும் மேல்விவரம் தெரியுமானால் பகிர்ந்து கொள்ளலாமே!
சார்ந்த வகை: பொது :: நாள்: டிச 11th, 2006. 3 மறுமொழிகள்.
தற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான "லலிதா ராம்" அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே உரித்தான மேன்மையான தரத்துடன், பளபள காகிதத்தில் அமர்க்களமாக பதிப்பித்திருக்கிறார்கள். "நேசமுடன்" வெங்கடேஷ் அவர்கள் விகடன் பதிப்புப் பகுதியில் முக்கியப் பொறுப்பேற்றபின் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.
இந்நூலின் இன்னொரு சிறப்பு அதில் வெளிவந்துள்ள பல கிடைத்தற்கரிய படங்கள். அவை சங்கீத ரசிர்கர்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரு. லலிதா ராம் அவர்கள் ஜிஎன்பியின் இசையின் நுணுக்கங்களை விவரித்து எழுதியுள்ளார். இது அவருடைய ஆழ்ந்த இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் பலரைப் பேட்டிகண்டு, இதுவரை எவரும் அறியாத பல நிகழ்வுகளையும் உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இந்த சீறிய பொக்கிஷத்தின் விலை வெறும் ரூ. 65 தான்! இதை இணையத்தில் பெற இந்த உரலை க்ளிக் செய்க:
விகடன்.டாட் காம் இணையத்தில் வாங்கும் வசதி
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 21st, 2006. 1 மறுமொழி.
சமீபத்திய மறுமொழிகள்