‘பொது’ வகைசார்ந்த இடுகைகள்

இயற்கை விருந்து

பொது :: 13 மறுமொழிகள் »

இன்னும் சிறிது இளைப்பாருங்கள்! சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்!

பச்சைப் பசேல்

வண்டாடும் சோலை

வைக்கோல் போர்

ஒளி முழுதும் உனக்கே சொந்தமோ?

:: (பார்வை 959 முறை) ::

இயற்கை எழில்

பொது :: 2 மறுமொழிகள் »

சென்ற திங்களில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றேன். வழியிலும், அவ்வூரிலும் நான் கண்ட காட்சிகள் சில.
சுட்டி விட்டால் விரியும் சமர்த்துப் படங்களவை!

கிராம ரம்மியம்

மன்னிக்கவும்!

மீதமுள்ளதை நாளை இடுகிறேன்.

:: (பார்வை 877 முறை) ::

*நன்றி*

பொது :: 3 மறுமொழிகள் »

இந்த வாரக் கடைசிப் பதிவை நேற்றே இட்டுவிடலாமென்றால், நான் இருந்ததோ திருச்சி அருகில் ஒரு ஊரில். அங்கிருந்த ஒரு உலாவும் மையத்தினுள் சென்றால், பழைய கற்காலத்தின் 98-ஐ பாவிக்கும் ஒரு கணினி, முக்கி முனகித் திறந்தது. தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்யலாமென்றால், எ-கலப்பையை இறக்க முடியவில்லை. மேலும் "கண்ட்ரோல் பேனல்" என்கிற கர்ப்பக் கிரஹத்தினுள் நுழைய அனுமதியில்லை. நிர்வாகியைக் கேட்டால் கடவுச் சாவி என்னிடம் இல்லையென்கிறார். சரி, உலாவியின் எழுத்துறுக் குறியீடுகளை மாற்றிப் பார்த்தால், அதுவரை தமிழ்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்த எழுத்துக்கள், எங்கள் ஊரில் தயிர், மோர், பால், காய்கறிகள் ("பொய்யூர்" கத்தரிக்காய் வியாபாரி உட்பட) கணக்குக்காக சுவற்றில் காட்டாமணி இலையைக் கசக்கிக் கிழிக்கும் கோடுகள்போல் தெரிய ஆரம்பித்தன. என் செந்தமிழ்நாட்டில் தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லையே என்ற வருத்தத்துடன், அருகேயிருந்த உணவு விடுதிக்குள் சென்று அவர்கள் படைத்த சூடான இட்லிகளின் மேல் என்கோபத்தைச் செலுத்தினேன்.

இப்போது வீடுவந்து சேர்ந்துள்ளேன். இன்னும் இரண்டு, மூன்று மணிநேரம் என் நட்சந்திர அந்தஸ்து மிளிரும். அதற்குள் நன்றிகளை நவின்றிடலாமென்று அடிக்கிறேன் அவசரமாக!

என்னை சென்ற வார நட்சத்திரப் பதிவாளனாக அங்கீகரித்த காசி அவர்களுக்கும் மதி அவர்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள். மேலும் என் பதிவுகளை வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும், தம் பதிவுகளில் இவற்றைப் பற்றி எழுதியவர்களுக்கும், வேறு வகைகளில் ஊக்கமளித்தவர்களுக்கும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் "பாரா"ட்டியவர்களுக்கும், இனிமேலும் தொடர்ந்து என் பதிவுகளைப் படிக்கப் போகிறவர்களுக்கும், மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றிகள் சென்றடையட்டும்.

என் பெட்டிக்கடையை இன்னும் செம்மைப் படுத்தி விரிவாக்க, இவ்வித அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளிக்கும் என்று கூறி, அடுத்த பதிவைப் பற்றி யோசிக்கச் செல்கிறேன்.

பெர்னார்ட் ஷா தன்னைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது: (நேரடியான தமிழாக்கமல்ல):

"சிலர் என்னை விரும்பலாம். பலர் என்னை வெறுக்கலாம். ஆனால் யாரும் என்னை ஒதுக்கித் தள்ள மாட்டீர்கள்"

:: (பார்வை 806 முறை) ::

யார் எதிரி?

பொது :: 2 மறுமொழிகள் »

அவர் பெயர் லக்ஷ்மிபதி.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியாயிற்று. யார் பணம் கட்டுவார்கள்? அதிருக்கட்டும், சாப்பாடே தகராறு. பெற்றோர்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்த்திவிட்டு எங்கோ வெளியூர் சென்று பிழைக்கப் போய்விட்டார்கள். எதிர் வீட்டு மாமா என்னதான் நல்லவராயிருந்தாலும் உட்கார்த்திவைச்சு சோறுபோடுவாரா? என்னென்னவோ சின்னச் சின்ன வேலைகளை சிறுமை பார்க்காமல் செய்து பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒன்றும் ஒத்துவரவில்லை. யாரோ பட்டணத்துக்கு அழைத்து வந்தார்கள். வ்யதான ஒருவருக்கு காலையில் தமிழ் தினசரியை உரக்கப் படிக்க வேண்டும். பின் டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப் ஆகிய இடங்களில் பந்து பொறுக்கிப் போட வேண்டும். நாட்கள் போய்க்கொண்டிருந்தன. கால் வயிறு அரைவயிறு நிரம்பிக் கொண்டிருந்தது. மெட்ராஸ் சரிப்பட்டு வரவில்லை. திரும்பவும் கிராம வாசம். பாடசாலையில் சேர்த்துவிட்டனர் யாரோ. அங்கும் பாதிப் படிப்பில் விட்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். என்ன தொழில்? புரோகிதம்தான். அதற்கு மரியாதையாக "உபாத்யாயம்" என்று அழைப்பார்கள். அதாவது அவர்கள் "வாத்யார்" என்கிற ஸ்தானத்தில் இருப்பார்கள் "எனக்கு தட்சிணை கொடுத்தால் உனக்குப் புண்ணியம்" என்று கூறி எஜமானரிடமிருந்து செய்த வேலைக்கு கூலி பெறவேண்டும். இந்தக் காலம்போலில்லை. ஒரு அமாவாசை தர்ப்பணத்துக்கு நாலணா தட்சிணை என்று பேசி அதையும் கடன் சொல்லிவிடுவார்கள். பிராமண சமுதாயத்துக்குள்ளும் மரியாதை கிடையாது. "முஷ்டி வாங்கி" என்ற பட்டம் வேறே. இதைத் தவிர பெரிய வாத்யார்கள் இவரை வளரவிடவில்லை. "அவனுக்கு என்ன தெரியும்? பிரயோகம் முழுக்கப் படிக்காதவன்" என்ற துர்விமரிசனம்.

பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒருநாள் விட்டுத் தொலைத்தார் அந்தத் தொழிலை. நாலுபேரிடம் கடன் வாங்கி ஒரு சின்ன கூலி அறவை மில் தொடங்கினார். பனஞ்சப்பைக்கு பதில் தென்னஞ்சப்பை போட்டு சிக்கனமாக கட்டினார். மில் வேலைசெய்யத்தொடங்கியது. கலத்துக்கு அரை ரூபாய் கூலி. காசு சேர ஆரம்பித்தது. திருமணமாயிற்று. ஒரு பெண் பிறந்தாள். ஒரு அல்லர் இருந்த இடத்தில் மாவு, மிளகாய் என்று மூன்று அல்லர் சேர்ந்தது. பென்ணின் பெயரை மில்லுக்கு சூட்டி அழகு பார்த்தார்.

மேலும் காசு சேர்ந்தது. சேர்ந்தது காசு மட்டும் அல்ல. பழைய உறவுகளும். லக்ஷ்மிபதிக்கு அடுத்து மூன்று தங்கைகள். அவருடைய சம்பாத்தியத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வந்து சேர்ந்தனர். பழைய மானியத்தில் கிடைத்த ஒண்ணரை வேலி பங்கு சாகுபடி செய்ய ஆரம்பித்தார். (நூறு குழி = ஒரு மா. இருபது மா = ஒரு வேலி. ஒரு வேலி = சுமார் ஆறேகால் ஏக்கர்.)

பத்தாயத்தின் ரொம்பிய நெல். வெள்ளைச் சம்பா, சிகப்புச் சம்பா பின் ஆடுதுறை-27, பயறு, உளுந்து இப்படிப் பெருகியது. வருவோர் போவோர், விருந்தாடி என்று தினத்துக்கும் கல்யாணச் சிலவுதான். ஆனால் லக்ஷ்மிபதிக்கோ, அவருடைய மனைவி, குழந்தைகளுக்கோ வேண்டியதைச் செய்ய ஒருவரும் கிடையாது. உரிமைகள் கைமாறின. இவரும் நம் தாயார் மற்றும் உடன்பிறந்தோருக்குச் செய்வது தன் கடமை என்று தியாகியாக மாறினார். குழந்தைகள் பெருகின. அவருடைய குடும்பத் தேவைகள் பெருகப்பெருக, உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதிகள் குறையுமோ என்ற கவலை தோன்றியது தாயாருக்கு. எப்போதும் அப்பளக் கச்சேரி, முறுக்குக் கச்சேரி, சீடைக் கச்சேரி என்று கூடம், தாழ்வாரம், முற்றம், தொட்டி முற்றம், காம்பிரா உள், ரேழி என்று கிடைக்கும் இடமெல்லாம் வேஷ்டியைப் பரப்பி டின் டின்னாக நிரப்பி உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதியாகும். ஆனால் லக்ஷ்மிபதிக்கொ, அவருடைய குழந்தைகளுக்கோ கண்ணில்கூட காணக்கிடைக்காது. சம்பாதிப்பதுதான் அவர் உரிமை. அனுபவிப்பது இல்லை.

தாயார் லக்ஷ்மிபதியின் குழந்தைகளை வெறுக்க ஆரம்பித்தாள். இவை மட்டும் பிறக்கவில்லையென்றால் தன் இஷ்டப்படி சிலவு செய்யலாமே.ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவன் கேள்வி கேட்கத் தொடங்கினால் என்ன செய்வது. அவளுடைய வெறுப்பு பல வழிகளில் வெளிப்பட ஆரம்பித்தது. குழந்தைகளுக்கு வாழ்க்கை நரகம்தான்.

இதற்கிடையில் மில் அமைந்திருக்கும் மனைக்கட்டின் மேல் ஒரு வழக்கு. மானிய நிலத்தின்மேல் சக்திவாய்ந்த ஒரு அமைப்பு செய்த ஆக்கிரமிப்பு. அதனால் தொடங்கிய வழக்குகள். அடிக்கடி ஈரங்கி, வாய்தா, நம்பர் கட்டு, வக்கீல், வக்கீல் குமாஸ்தா - அவர் வாழ்க்கைத்தடமே தாறுமாறானது. யாராவது அவரை எதிர்த்து ஏதாவது கேஸ் போட்டவண்ணம் இருந்தார்கள்.

தாயும், உடன்பிறப்புக்களுமே இரத்தம் உறிஞ்சும் அட்டைகளாயின. மனைவியோ விழித்திருக்கும் நேரமெல்லாம் மாமியாரிடம் மொத்து பெற்றுச் சலித்துப் போய் பிறந்த வீட்டை நினைத்தே ஏக்கம் கொள்ள ஆரம்பித்தாள். போனால் திரும்பிவர மனம் வராது. குழந்தைகள் கதி?

இதற்கிடையே மில்லைக் காலி செய்ய நோட்டிஸ். மீண்டும் கோர்ட். கேஸ். பிராது. பொறாமை.

இத்தனைக்கும் இடையில் பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்தார். அவருடைய ஜாதியிலேயெ ஒருவர் பெட்டிஷன் போட்டார் - லக்ஷ்மிபதியின் பெண் சட்டப்படியான ("சார்தா" சட்டம்) வயது வருவதற்கு முன்னால் திருமணம் நடந்தது என்று.

இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த இடத்தில் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. ஒரு பையன். அவன் தான் இவருடைய நனவாகாத கனவுகளையெல்லாம் பூர்த்திசெய்யப் போகிறான் என்று ஆசையாக இருந்தார். அதுவும் பொய்த்துப் போனது. அவன் ஒரு சோம்பேறியாக, மிகச் சாதாரணமாக இருந்தான். அன்றாட வாழ்வே பிரச்னையாய், ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் போட்டு சமாளிக்க நேர்ந்தாலும் லக்ஷ்மிபதி ஒரு சிந்தனாவாதி. ராஜாஜியின் மார்க்க அரேலியஸ் சிந்தனைகளை வாசிப்பார். தினமணியை ஒரு வரி விடாமல் படிப்பார். பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தார். இசையிலும் ஈடுபாடு உண்டு. படிப்பு அவ்வளவு இல்லையென்றாலும் உலக அறிவு உண்டு. அவருக்கு "கண் பார்த்தால், கை செய்யும்". ஆனால் அவர் மகன் அவ்வளவு சூட்டிகையில்லை. கொஞ்சம் மொத்து. இந்த விஷயத்தில் அவருக்கு பெரிய ஏமாற்றம்.

அவருக்கு அப்போது வயது அறுபது. தன் மக்களுக்கும் சுற்றத்தவருக்கும் அவர் எவ்வளவோ செய்திருந்தும், அவருடைய அறுபது வயது பூர்த்தியானதைக் கொண்டாட யாருக்கும் தோன்றவில்லை. இதற்கிடையில் நீரிழிவு வேறு உறவு கொண்டாடத் தொடங்கியது. இரத்ததில் யூரியா சேர்ந்துவிட்டது. கண்கள் மங்க ஆரம்பித்தன.

லக்ஷ்மிபதி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒருமுறை தீர்க்கமாக நோக்கினார்.

"ரெமாஜென்னின் பாலம்" (The Bidge at Remagen) என்று ஒரு திரைப்படம். இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றியது. ஒரு முக்கியமான பாலத்தைத் தகர்க்க மேஜருக்கு உத்தரவு. வெடியை இயக்கப் போகும் தருவாயில் சில பள்ளிக் குழந்தைகள் பாலத்தின்மேல் நடக்கத் தொடங்கியதைக் கண்டார் அந்த மேஜர். அவர்கள் பத்திரமாகக் கடக்கும்வரை சில நிமிஷங்கள் தாமதம் செய்தார். அதற்குள் எதிரிப் படைகள் பெரும் எண்ணிக்கையில் வந்து பாலத்தைக் கைப்பற்றிவிட்டன. அந்த மேஜரின் படைக்கு பெரும் தோல்வி. உத்தரவுப்படி ஏன் பாலத்தைத் தகர்க்கவில்லை என்று கேள்வி கேட்டு மிலிடரி "கோர்ட் மார்ஷ"லில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் ஒரு மரப்பலகைமுன் நிற்கிறார். அவரை நோக்கி சுமார் பத்து துப்பாக்கிகள் நீட்டிக் கொண்டு நிற்கின்றன். "சுடு" என்ற ஆணை கேட்டவுடன் அந்தத் துப்பாக்கிகள் இயங்க, அந்த மேஜரின் உடல் சல்லடைக் கண்ணாகி உயிரற்று விழும். மேஜரை அழைத்துச் சென்று அந்த பலிபீடத்தில் நிறுத்தியவர் அவர்கீழ் பணியாற்றிய அதிகாரி. "இறப்பதற்கு முன் கடைசியாக ஒரு இழுப்பு இழுக்கட்டுமே" என்று மேஜர் வழக்கமாக பாவிக்கும் சிகரெட்டைப் பற்றவைத்து அவருடைய குழாயையும் பொருத்தி வாயில் இடுகிறார். அப்போது தலைக்கு மேலே சில போர் விமானங்கள் பறக்கின்றன. அந்த உதவி அதிகாரி மேஜரைப் பார்த்து, "எதிரி விமானங்கள்" என்றார். மேஜர் சிரித்துக் கொண்டே, "நான் இந்தக் கணத்தில் இருக்கும் நிலையில் என் எதிரி யார்?" என்று வினவுகிறார்!

நீங்களே சொல்லுங்கள், லக்ஷ்மிபதியின் எதிரி யார்?

:: (பார்வை 780 முறை) ::

உங்களைப் பாக்கவே முடியலை!

பொது :: Comments Off

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம். ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பற்றியும் எதிர்வரும் இதழ்களில் எழுதுகிறேன்.

ஒருநாள் எனக்கு யார் கண்ணிலும் படாமல் திருச்சியிலிருந்து இரவு இரயிலில் சென்னை செல்லவேண்டி நேர்ந்தது. சாதாரண பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்படாத (unreserved) பொதுப் பெட்டியில் ஏறி சாமான்களுக்கான பலகையில் ஏறிப் படுத்தேன். சளசளவென்று கூட்டம், இறைச்சல். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். பரிசோதகர் வந்தால் கையை மட்டும் நீட்டி டிக்கட்டை காண்பித்தால் போகிறது என்றெண்ணி மூக்கை விடுத்து முகத்தையும் மூடிக்கொண்டேன்.

மணி இரவு பதினொன்றைத் தாண்டியவுடன், இடத்துக்குச் சண்டை போட்டவர்கள் கூட ஒருவர்மேல் ஒருவர் முட்டிக் கொண்டும், இடித்துக் கொண்டும் ஆளாளுக்கு கோழித்தூக்கத்தில் ஆட ஆரம்பித்தார்கள். நானும் சற்றுக் கண்ணயரலாமென்றால் காத்தாடி சுற்றவில்லை. இது போன்ற சூழ்நிலையில் எல்லோரும் பயன்படுத்தும் ஆயுதமான "கட் பாக்கெட்" சீப்பை எடுத்து ஃபேன் பிளேடுகளைத் தட்டி உசுப்பிவிட்டபின் ஒரு வழியாக ஏகப்பட்ட சிணுங்களுடன் சுழல ஆரம்பித்தது. சரி, கொஞ்சம் கண்ணை மூடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வண்டி ஏதோ ஒரு ஊரில் நின்றது. யாரோ ஏறினார்கள். இரண்டு மூன்று பேரிருக்கும். ஏறும்போதே சத்தம் போட்டுப் பேசிக்கொண்டே உள்ளே வந்தார்கள். ஏற்கனவே கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஓரிருவர் புதிதாக நுழைந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் போல. ஒருவர் ஒரே சந்தோஷத்துடன் "வாங்க வாங்க, பாத்து எவ்வளவு நாளாச்சு. மறுபடி உங்களைப் பார்க்கவே முடியாம போயிடுமோன்னு நெனைச்சேன். இப்ப திடீர்ன்னு பார்த்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு" என்று சத்தம் போட்டு முகமன் கூறியபிறகு பல விஷயங்களைப் பற்றிப் பேசத்தொடங்கினர். பெரும்பாலும் அரசுத் துறைகள் சிலவற்றில் உள்ள குறைபாடுகளைப் பற்றியே பேச்சு சுற்றிச்சுற்றி வந்தது. "நமக்கு வரவேண்டிய போஸ்டெல்லாம் வேற கேடகரீக்கு போகுதே, இதை நம்ப விடக்கூடாதுங்க" என்றும் இன்னும் சில செயல்பாடுகளைப் பற்றிய அவர்களின் புகார்கள், குறைகள் போன்றவற்றைப் பற்றிப் பேச்சு, பேச்சு, ஓயாத பேச்சு. சிறிது நேரத்தில் வண்டியின் "க்ளிக்கட்டீ கிளிக்"குடன் இந்த இரைச்சலும் சேர்ந்துகொள்ளவே, இதற்கு காது பழக்கமாகி, லேசாக தூக்கம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் பேசும் சத்தம் ஏற்ற இறக்கமாக இருந்தபடியால், அடிக்கடி விழிப்பு வந்தவண்ணம் இருந்தது.

"மெட்ராஸிலே எங்க தங்கப் போறீங்க, மாரிமுத்து கூடவா?"

"மறுபடி எப்போ பாக்கலாம்?"

சரி, இதுக்குமேல் தாக்குப் பிடிக்கமுடியாது. இறங்கிப் போய் அவர்களை ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான். "ஏன் இப்படி இறைஞ்சு கத்தறீங்க. மெதுவாகப் பேசக்கூடாதா" என்று சூடாகக் கேட்டுவிடவேண்டியதுதான் என்று கருவிக்கொண்டு கோபத்துடன் இறங்கி, யாரையும் மித்தித்துவிடாதபடி கவனமாகத் தாண்டி, கதவுப் பக்கம் வந்தேன்.

அப்படியே உறைந்து நின்றேன்.
நான் செய்ய நினைத்த செயலை என்ணி வெட்கப்பட்டு நின்றேன்.

அவர்கள் எல்லோரும் கண் பார்வை இல்லாதவர்கள்!

:: (பார்வை 828 முறை) ::

இரயில் சிநேகம்-2

பொது :: 2 மறுமொழிகள் »

பயணங்களில் பிரபலங்கள் அனைவருமே மனம் திறந்து பேச மாட்டார்கள். சிலர் மிகவும் "ரிசர்வ்டாக" இருப்பார்கள். ஆனால் சகஜமாக உரையாடும் எல்லோரிடமும் நான் ஒரு பத்திரிக்கையாளனைப் போல் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவது வழக்கம். அவர்களும் சளைக்காமல் பதில் சொல்வார்கள். ஆனால் நான் நச்சரிப்பதில்லை. எனக்கென்ன, பொழுது போக வேண்டும். ஏதோ நாட்டு நடப்பு தெரிந்துகொண்டது போலும் அமையவேண்டும், அவ்வளவுதானே!

அதுபோல் என்னுடன் திறந்த மனத்துடன் உரையாடிய இன்னொருவர் திரு. ப. நெடுமாறன் அவர்கள். அவருடன் நெடுநேரம் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. அப்போதுதான் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சோர்வில் இருந்தார். அதற்கு முன்னால் இந்திரா காந்தியை ஒரு தாக்குதலிலிருந்து காப்பாற்றியதால் "மாவீரன்" என்ற பட்டப்பெயர் பெற்றிருந்தார். அவர் பேசியது கொஞ்சம், ஆனால் படித்துக் கொண்டிருந்தது நிறைய. கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருந்துகொண்டேயிருந்தது. மதுரையின் சரித்திரத்தைப் பற்றி நிறைய விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டில் பெரிய வல்லமை பெர்ற அரசுகளாகத் திகழ்ந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் ஏன் வீழ்ச்சியடைந்தன, பிற்காலத்தில் நாயக்கர்கள், மராட்டியர்கள், நவாபுகள், மற்றும் குறுநில மன்னர்கள் கூறு போட்டு ஆளக்கூடிய நிலை ஏன் ஏற்பட்டது, ஏன் தமிழ் மன்னர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டுக்கொண்டே காலம் கழித்தனர் - இப்படியெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே வந்தேன். எல்லாவற்றிற்கும் பொறுமையுடனும், புன்சிரிப்புடனும் பதில் அளித்தார். நம்மிடையே ஒற்றுமையின்மை, போர்முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், வெளிநாடுகளுடன் தொடங்கிய வணிக பாதிப்புகள், பேராசைகள், துரோகங்கள் போன்ற பலவற்றைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். என் கருத்து அவருக்கு உடன்பாடில்லையென்றால் சிரித்துக் கொண்டே மறுத்துவிடுவார். அதனால் உரையாடல் நெருடலில்லாமல் தொடர முடிந்தது.
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1035 முறை) ::

ஒரு அறிவித்தல்

பொது :: 2 மறுமொழிகள் »

என் வலைப்பூ பற்றிய ஒரு அவசர அறிவித்தல்

வயாக்ரா, பயாக்ரா என்று கொள்ளை கொள்ளையாக வேண்டாத எரிதங்களால் என் பின்னூட்டப் பெட்டிகள் நிரம்பி, என் பேண்ட்விட்தையும் காலியாக்கிய நிலையை மாற்றவேண்டி பலதரப்பட ஸ்பாம் எதிர்ப்பு நிரல்களைப் பாவித்தேன். அவை குதிரைப்படை, யானைப் படை, காலாட்படை சகிதம் வந்து எல்லாக் கதவுகளையும் அடைத்து விட்டன. அதன் விளைவாக நல்ல பின்னூட்டங்களும் தடைபட்டுப் போயின. என் பதிவுகளுக்கு விழும் எதிர்வினைகளே மிகக்குறைவு. அவற்றையும் இந்த "ஸ்பாம் கர்மா"க்கள் அழித்து விட்டால் காற்றுவாங்க வேண்டியதுதான். அது தவிர, கருத்துகளைப் பதிவு செய்தவர்களும் என்னைத் தவறாக எண்ணியிருப்பார்கள். அதனால் உடனே என் தளத்தின் கொல்லைப்புரம் (back end) சென்று எட்டிப் பார்த்தேன். அங்கு "பத்து பின்வினைகளை நான் விழுங்கி விட்டேன்" என்று அந்த எரித எதிர்ப்பு நிரல் எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. "அடடா, இன்னும் எவ்வளவு போயிருக்குமோ தெரியவில்லையே. இந்த மாமியார்கள் மட்டும் இல்லாமலிருந்தால் டோண்டுவை மிஞ்சியிருக்கலாமே" என்ற கவலையுடன், கிடைத்த பத்தை காப்பியெடுத்து பதிவு செய்துள்ளேன்.

ஆனால் இந்த எரிதங்களும் ஒருவகை நல்ல கைங்கர்யங்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. "நம்மை யாரும் கண்டுகொள்வதில்லை" என்று எப்போதாவது தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த எரிதங்களை வாசியுங்கள். உங்கள் மேல்தான் அவர்களுக்கு எத்தனை அக்கறை! "மனம் தளராதீர்கள். இளஞ்சிட்டுக்களுக்கும் நீங்கள் பூர்ண திருப்தி அளிக்கலாம்", "உங்கள் மனைவி உங்களின் புதிய பரிமாணத்தை அறியப் போகிறார்கள்", "இன்றோடு உங்கள் கடன் தொல்லை காலி' - போன்ற தெம்பூட்டும் அறிவிப்புகளை அளிக்க யாரால் முடியும்? உங்கள் அண்ணன் தம்பிகளால் அளிக்க முடியுமா? ஆகையால் "ஸ்பாம்"கள் தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதில் பெரும் தொண்டு புரிகின்றன என்ற கருத்துடன் எல்லா படைகளையும் வேலையைவிட்டு நீக்கி விட்டேன்.

ஆகையால் கருத்துக் காடவராயர்களே, வாருங்கள், வாருங்கள்!கொட்டுங்கள் உங்கள் திட்டுக்களை! :)

( இரயில் சினேகம் -2 வரும். காத்திருங்கள்!)

:: (பார்வை 943 முறை) ::

இரயில் சிநேகம்

பொது :: 7 மறுமொழிகள் »

நீண்ட இரயில் பயணங்களில் சீக்கிரத்தில் போரடித்துப் போய்விடும். எவ்வளவு நேரம்தான் படிப்பது, வேடிக்கை பார்ப்பது. அதுவும் குளிர்சாதனப் பெட்டிகளில் வெளியே பார்க்கக்கூட முடியாது. இதனால் சக பயணிகளிடம் பேச்சுக் கொடுக்கவேண்டிய கட்டாயம் வரும். சின்னசின்ன வார்த்தைகள். புன்சிரிப்பு. பின் பேப்பர் பரிமாற்றம். பின் குசல விசாரிப்பு. “எங்க வேலை பாக்கிறீங்க?”- இதிலே ஆரம்பிக்கும். பின் “உங்க வீட்டிலே தண்ணீ வருதா?” (சென்னைவாசியாக இருந்தால் இந்தக் கேள்வியை மூளையின் பங்கெடுப்பு இல்லாமலேயே வாய் தானாகக் கேட்கும்!) போன்ற விசாரிப்புகளைக் கடந்து சிறிது நேரத்தில் பேச்சு நெருக்கமாகிவிடும். இவ்வித உரையாடல்களின் முத்தாய்ப்பாக "நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும்" என்ற மன நெகிழ்ச்சியுடனான அழைப்புகள் கொடுக்கப்படும். பலவித பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதிகள் அளிக்கப்படும்.

ஒரு விநோதமான விஷயம் என்னவென்றால், சாதாரணமாக பிறரிடம் மனம் விட்டுப் பேசாத உம்மணாமூஞ்சிகள்கூட இதுபோன்ற நேரங்களில் தங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடும்ப சமாசாரங்கள் போன்றவற்றை கொஞ்சம் மனம் திறந்து பேசுவார்கள். அந்த பயணச் சூழ்நிலை அதுபோல் செய்ய வைக்கிறது என்று என்ணுகிறேன். வண்டியைவிட்டு இறங்குமுன் கையெல்லாம் கொடுத்து உருக்கமாக விடைபெறுதலும் நடக்கும். ஆனால் அவரவர் தத்தம் கூண்டுக்குச் சென்றடைந்தபின் இந்த அறிமுகங்கள் (பெரும்பாலும்) முழுதும் மறந்து போய்விடுகின்றன. ஏன் இப்படி? பயணத்தின்போது நம் மனத்தில் இறுக்கமில்லாத ஒரு நிலை; நம்வாழ்வில் ஒன்றியுள்ள பல அன்றாடப் பிரச்னைகள் தலைதூக்கி "இதோ, என்னைப்பார் முதலில்" என்று கூவாமல் ஒதுங்கியிருப்பது - இது போன்ற சூழ்நிலையால்தான் மனிதன் நீண்ட பயணங்களின்போது தன் அடிப்படை இயல்பிலிருந்து சிறிது வேறுபட்ட அணுகுமுறை கொள்கிறான் என்று என்ணுகிறேன். ஆனால் அன்றாட "ரொட்டீனு"க்கு திரும்பியவுடன் இவையெல்லாம் கவனத்தில் வருவதில்லை. ஆகையால்தான் ஆழமில்லாத உறவுகளைக் குறிக்க "இரயில் சிநேகிதம் போல" என்ற சொற்றொடர் வழக்கிலிருக்கிறது என்று நினைக்கிறேன்.
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1248 முறை) ::

ஓவியம் படைக்கும் ஓவியர்!

பொது :: 2 மறுமொழிகள் »

மனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை! ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட "நெட்"டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் "அகலப் பாட்டை" (Broadband) போட்டுவிட்டபின் "வளை"யில் குடியிருப்பவர்களெல்லாம் "வலை"யில் குடியிருக்கத் தொடங்கி விட்டனர்! வெளிநாட்டில் வாழும் நம் மக்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் வசிக்கும் நாடுகளில் இணையம் ஒரு பெரிய குழாயில் வந்து byte-களைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது!

ஓவியர் கனேஷ்இந்த சூழ்நிலையில் தம் தாய்மொழியிலேயே இணையம் காணப்படுமானால் அது எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கும்! அந்த தாகத்தைத் தணிப்பதற்காகத் தோன்றியுள்ள பல இணைய இதழ்களில் முக்கியமான ஒன்று "தமிழோவியம்" ஆகும். அது ஒரு பல்சுவை இதழாக வாரந்தோரும் மலர்கிறது. பல பிரபல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அதில் அளிக்கிறார்கள். அதை நடத்தும் திரு. கனேஷ் சந்திரா அவர்கள் ஒரு பல்துறை வல்லுனர். பழகுவதற்கு எளியவர். தமிழின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரை யாஹூ தூதுவன் மூலம் நான் கண்ட பேட்டியினை உங்கள்முன் இடுகிறேன். இனி அவரிடமிருந்தே தமிழோவியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஆம், அவர் சிறந்த ஓவியரும் ஆவார்!
=========================================================

தமிழோவியம் யாரால், எப்படி, எப்போது தொடங்கப்பட்டது ?

எனது நண்பர் அருணும், நானும் சேர்ந்து ஜன. 1 2002 தொடங்கினோம். அருண் ஆசிரியர் பொறுப்பையும், நான் இணைய நிர்வாக பொறுப்பையும் ஏற்றோம்.
திரு. முத்துநெடுமாறன் உதவியால் டிஸ்கி 1.7 இயங்கு எழுத்துருவில் தமிழோவியம் முதன் முதலில் அறிமுகம் ஆனது. தமிழோவியத்தில் தினமும் புதிதாய் ஏதாவது இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அப்போது தினமும் ஒரு பகுதியை வலையேற்றம் செய்து வந்தோம்.

2003 ஆண்டில் அருண் திரைப்பட துறையில் கலக்க விரும்பியதால், 2003 செப்டம்பரில் மீனாக்ஷி ஆசிரியராய் பொறுப்பேற்றார்.

பின்னர் 2003 இறுதியில் சென்னை சென்றிருந்த போது, நண்பர் பா.ராகவனின் உதவியால் பல எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர்களில் பலர் தினசரியை விட வார இதழ் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். ஆகவே 2004ம் ஆண்டு முதல் தமிழோவியத்தை வார இதழாக மாற்றினோம்.

ஆனால் ஒன்று. தினசரியோ / வார இதழோ தமிழோவியத்தின் தாரக மந்திரம் 'infotainment"

இது ஒரு "ஒன் மேன் ஷோ" போல இருக்கிறதே ?

இல்லை நிச்சயம் இல்லை. முன்வரிசையில் என் பெயர் வருவதால் அப்படித் தோன்றும். எங்கள் அணியில்:

ஆசிரியர் : மீனாக்ஷி

ஆலோசகர்கள் : பாஸ்டன் பாலாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி

தொடர்பாளர் : ரஜினி ராம்கி

மற்றும் ஆர்வத்தோடு வாரா வாரம் கட்டுரைகள் எழுதும் கட்டுரையாளர்கள் என பலர் இதன் பின்னணியில் உள்ளனர்.

திண்ணை, திசைகள் போல் இலக்கிய இதழ்களாக இல்லாமல், விகடன், குமுதம் போல் கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் தமிழோவியம் தத்தளிப்பது போல் தெரிகிறதே ?

நான் முன்பு சொன்னது போல் இது ஒரு infotainment site. தமிழோவியத்தில் இதுதான் வரும் என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் பலதரப்பட்ட விஷயங்களை தருகிறோம்.
முக்கியமாக கிசுகிசுவோ, மலிவான படைப்புகளோ, தனி மனித துதிகளோ இதில் இருக்காது.

தமிழோவியத்தின் வளர்ச்சி மற்று எதிர்கால திட்டங்கள் என்ன ?

தமிழோவியம் தொடங்கிய காலத்திலிருந்து Rediff.com/Sulekha.com போல் ஒரு முழுமையான போர்டல்லாக ஆக்க வேண்டும் என்பதே இலக்கு. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். மின்புத்தகங்கள், தமிழ்ப்பதிவு என்று பல வழிகளில் முயன்று வருகிறோம்.

இது முற்றிலும் தமிழ் சார்ந்து, தமிழில் வருவதால் வாசகர்களின் எண்ணிக்கை பெருக்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

வாசகர்களின் எண்ணிக்கை வளராமலிருப்பதற்கு தமிழ் எழுத்துருக்கள் பிரச்னைதான் காரணமா? உலாவியை(browser)த் திறந்தவுடன், எந்தவித திருகாணி வேலை செய்யாமலேயே, (out of the box) தமிழ் எழுத்துக்கள் தோன்றும் காலம் எப்போது வரும்?

நீங்கள் சொல்வது ஒரு முக்கிய காரணம்.

இப்போதைக்கு Out of the box ஆக Windows XP ல் 'லதா' எழுத்துரு கிடைகிறது.
இணையத்தில் யுனிகோட் பிரபலம் அடைந்து வருகிறது.
Internet explorer / Netscape 7.2 உலாவிகளில் யுனிகோட் சரியாகத் தெரிகிறது.

தமிழகத்திலிருந்து வரும் நாளிதழ்களும், வார இதழ்களும் யுனிகோடிற்கு மாறினால், யுனிகோடிற்கு பெரும்பான்மை கிடைக்கும்.

புதிய OSகளும், உலாவிகளும் தமிழை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்.

தமிழோவியத்தின் அடிப்படை டெக்னாலஜி என்ன ?

மைக்ரோஸாப்ட் ASP யில் இயங்குகிறது. முதலில் Tscii 1.7ல் இயக்கி வந்தோம், இப்போது யுனிகோடில். தமிழோவியத்திற்கென ஒரு CMS (content Management system) ஐ உருவாக்கியிருக்கிறேன். இது XML/XSL/SQLServer ஆகியவற்றின் பின்புலத்தில் வேலை செய்கிறது.

அடிப்படையில் நான் ஒரு system analyst. நமக்கு முழு நேர வேலையே இணைய பக்கங்கள் வடிவமைப்பதுதான். ஆகவே இந்த ஏற்பாடு.

இத்தனை இலவச/ ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் இருக்க, சொந்தமாய் எழுத வேண்டிய அவசியம்?

எந்த ஒரு படைப்பாளிக்கும் தன் திறமையில் சின்ன கர்வம் இருக்கும். முழு நேர கணிணி பொறியாளராக இருந்து ஓபன் சோர்ஸ் மென்பொருட்களை உபயோகிக்க மனம் ஒப்பவில்லை. மேலும் நாமே செய்வதால் புதிதாய் கற்றுக்கொண்ட திருப்தியும் கிடைக்கிறது.

We don't want to reinvent the wheel. ஓபன் சோர்ஸ் ஒரு வசதி அதுவே எல்லாம் இல்லை. நமக்கு துணியோ, அரிசியோ யாரும் இலவசமாய் தந்து சமைத்துகொள், தைத்துகொள் என்று தருவதில்லை. ஆகவே எனக்கு ஓபன் சோர்ஸ் மேல் ஒரு பெரிய அபிப்பராயம் இல்லை.

அதற்காக மைக்ரோஸாஃப்டின் மென்பொருட்களையே பாவிக்க வேண்டுமா? இலவச "தளையறு மென்கலன்கள்" பல உள்ளனவே. அவை சிலவில்லாமல் இதே வேலைகளை செவ்வனே செய்யும் திறன் கொண்டவைதானே? அதிருக்கட்டும். கணினித் துறையில் உள்ளவவர்கள்தானே "திறமூல" சேவைகளில் தீவிரமாக உள்ளனர்? அவர்களின் மத்தியில் உங்களுக்கு ஒரு ஓட்டுகூட விழாது!

அலுவலகத்தில் மைக்ரோஸாப்ட் ASP மற்றும் ASP.NET உபயோகிக்கிறோம். இது போன்ற இலவச மென்கலன்கள் பிரபலம் ஆவதற்கு முன்பே மைக்ரோஸாப்ட் வழியில் நெடுதூரம் வந்து விட்டேன். ஆகவே தமிழோவியத்திலும் ASP உபயோகம் செய்யப்படுகிறது. இதில் புதிதாய் படிப்பது அலுவலக பணிகளுக்கு உபயோகமாய் இருக்கிறது.

ஒரு வேளை கணிணி பொறியாளனாய் இல்லாமல் இருந்திருந்தால் நானும் நீங்கள் சொல்வது மைக்ரோஸாப்டை ஒரு கை பார்த்து, இலவச தளையறுகளை தழுவியிருப்பேனோ என்னாவோ.

மணிக்கணக்காய் புதிய புதிய மென்கலன்கள் செய்து, அதை இலவசமாய் கொடுத்து பின்பு ஐயா முடிந்தால் Paypal-லுங்கள் என்பது பரிதாபமான விஷயம். இவர்கள் ஓட்டு இல்லாவிட்டால் பரவாயில்லை, நான் வேறு தொகுதியில் நிற்கிறேன்.

இணைய பத்திரிகைகளில் 'ஸ்ரீராமஜெயம்' எழுதினால்கூட பிரசுரம் செய்து விடுவார்கள் என்று ஒரு பேச்சு உள்ளதே ? ஏன் அப்படி ?

இது சற்று மிகைப்படுத்த பட்ட பேச்சு. ஒரு சில பத்திரிகைகள் புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த அப்படி செய்கிறார்கள். அது அவர்களுக்கே வினையாக முடிகிறது.

வலைப்பதிவுகள் வந்த பிறகு இணைய பத்திரிகைகளில் எழுதுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், சொந்த வலைப்பதிவில் எதைப்பற்றியும் எழுதலாம், எழுதாமலும் இருக்கலாம். சுதந்திரம். இப்படி பலர் ஒதுங்குவதால் சரி, கிடைக்கிற கட்டுரையைப் போடலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

அச்சு பத்திரிகைகளில் துணுக்கு எழுதினால் கூட ஐம்பதோ, நூறோ கிடைக்கிறது. இணையத்தில் அப்படி இல்லையே, ஏன் ?

அதில் போதிய வருமானம் இருக்கிறது சின்ன துணுக்குகளுக்கு கூட தருகிறார்கள். விரைவில் இணையத்திலும் அது போல் நடக்கும், நம்பிக்கை இருக்கிறது.

மின்புத்தகங்கள் தொடங்கிய போது இருந்த வேகம் இப்போதும் இருக்கிறதா ?

அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் தமிழோவியத்தில் பல புதிய மின் புத்தகங்கள் கிடைக்கும்.

தமிழோவியம் வலைப்பதிவுகளை ஏன் blogger.com போல் ஏன் பொதுவில் வைக்கவில்லை?

ப்ளாகர் போல் செய்ய சில infrastructure பிரச்சனைகள் இருக்கிறது. ஆகவே அதை பொதுவில் வைக்க முடியவில்லை. விருப்பப்படும் அன்பர்களுக்கு அந்த வசதியை செய்து தருகிறோம்.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி உங்களை பாதிக்கும் என்ற பயம் இருக்கிறதா ?

ஏன்? எதற்காக பயப்பட வேண்டும். சொல்லப்போனால் வலைப்பதிவின் வரவு மிக மிக நல்ல விஷயம். நிறைவான நமக்கு பிடித்த எழுத்துக்களை இனம் காண இது பெரிதும் உதவுகிறது.
அனைவரும் நன்றாக எழுதினாலும், ஒரு சிலரின் எழுத்துக்கள் நமக்கு பிடித்து போகும். இவர் விஷயம் தெரிந்து எழுதுகிறார், இவர் பொழுது போகமல் எழுதுகிறார், இவருக்கு நகைச்சுவை எளிதாக வருகிறது, இவர் வம்பிழுக்க எழுதுகிறார் என்று எழுத்தாளர்களை தரம் பிரித்து அதில் நமக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

இதை சிறப்பாக செய்ய உதவும் தமிழ்மணத்திற்கு ஒரு சபாஷ்.

அடிக்கடி பத்திரிகையின் வடிவமைப்பை மாற்றுவது தேவைதனா?

இணையம் வளர்ந்து வரும் வேகத்திற்கு புதிது புதிதாய் எதுவும் செய்யாவிட்டால் கமர்ஷியல் போட்டியை சமாளிக்க முடியாது. சாமான்ய வாசகர்களை மீண்டும் மீண்டும் வரவழைக்க மாற்றம் தேவைதான். சமயத்தில் இணைய நிர்வாகிகளுக்கு அதுவே பிரச்சனையாகிவிடும். அழகாய்/புதுமையாய் செய்கிறேன் என்று ஓவராக செய்துவிடும் அபாயம் இருக்கிறது.

உங்களின் பொழுது போக்கு ?

டி.வி பார்ப்பது, Videography and editing, மேடை நாடகங்களில் நடிப்பது.

உங்கள் நாடகங்கள் மற்றும் இலக்கியத்துறை அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

நாடகத்துறை அனுபவங்கள் என்று பெரிதாய் ஒன்றும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நியுஜெர்சி 'ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ்' மற்றும் நியுஜெர்சி 'USIA' நாடக குழுவில் பங்குபெற்று நடித்து வருகிறேன். நாடக மேடை அனுபவங்களை விட ஒத்திகை அனுபவங்கள் மிகவும் அருமையானவை.

உங்கள் பிறப்பு, வளர்ப்பு, சேட்டைகள், ஊர், படிப்பு, குடும்பம்……….?

பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். படித்தது MCA. கடந்த ஐந்தரை வருடங்களாக நியுஜெர்சியில் ஜாகை. அப்பா - S. சந்திரசேகரன் , அம்மா - சந்திரா தற்போது சென்னையில் இருக்கிறார்கள் . மனைவி - மீனாக்ஷி.

தமிழோவியம் படைப்பதால் நீங்கள் எத்தகைய நிறைவைப் பெறுகிறீர்கள்?

ஒரு மன நிறைவு, பலர் மத்தியில் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது.

ஆசைக்கு தமிழோவியம், தோசைக்கு??

Merril Lynch-ல் முழு நேர வேலை!

:: (பார்வை 1367 முறை) ::

தமிழ் வாழ்க!

பொது :: 9 மறுமொழிகள் »

ழகரம்இணையத்தில் நானே முதன்முதலில் தமிழில் எழுதி, அதனை வலையேற்றியபின் காணும்போது ஏற்பட்ட சிலிர்ப்பையும், மகிழ்ச்சியும் மனநிறைவையும் என்னால் முழுமையாக விவரிக்க இயலாது. ஆனால் இங்கு பரவலாக அன்றாடம் மலர்ந்து நிற்கும் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றைத் தமிழ்மணம் மூலமாகப் படிக்கும்போது பெரும்பாலும் மகிழ்ச்சியும், சில சமயம் விசனமும் தோன்றுகிறது.

சமீபத்தில் சன் டிவி காலை நிகழ்ச்சியில் ஒரு தமிழறிஞரைப் பேட்டி கண்டார்கள். அவர் பல்வேறு மொழிகளில் தென்படும் சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் இணைத்து, இதிலிருந்து அது தோன்றியதா, அதிலிருந்து இது கடன் பெற்றதா என்று நாம் குழப்பமடையும் வகையில் விவரித்துக் கொண்டிருந்தார். எல்லா மொழிகளிலும், காலப்போக்கில் மக்கள் பல மொழிபேசும் மக்களுடன் கலந்து உறவாடும்போது பிறமொழிச் சொற்கள் கலப்பது தவிர்க்க இயலாது. இதனை மொழி வல்லுனர்கள் ஒவ்வொரு சொல்லின் ஆணிவேரையும் தோண்டி ஆரய்ந்து இதன் மூலம் அது என்று பதிவு செய்கிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்த விவரத்தைக் காணலாம். அது அந்த சொல்லைப் பற்றிய மேலதிக விவரம் என்ற அளவில் மட்டும் வாசித்துவிட்டு, அந்தச் சொல் எதைக் குறிக்கிறது, அதனை எந்த முறையில் ஒரு வாக்கியத்தில் இடலாம் என்று மட்டும் தெரிந்து கொண்டு அகராதியை மூடிவிடுகிறோம். மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும், இலக்கியத்தைப் பாடமாகக் கற்பவர்களுக்கும், எழுத்தாண்மைத்துறையில் உள்ளவர்களுக்கும் இந்த etimology, philology என்றழைக்கப்படும் விவரங்கள் பயன்படும். அவ்வளவே. அதனைத்தாண்டி, "இந்தச் சொல் அங்கிருந்து இங்கு வந்ததல்ல, இங்கிருந்துதான் அங்கு சென்றது" என்று சிலர் வாதிடத் தொடங்குவதால்தான் விபரீதமான விளைவுகள் தோன்றுகின்றன. வெள்ளையர்கள் நம் நாட்டை ஆள்வதற்கான தார்மீக நியாயத்தைக் கற்பிப்பதற்காக "ஆரியப் படையெடுப்பு" என்னும் புனைகருத்தை (Aryan invation theory) வெளியிட்டு அதனை எல்லோரும் நம்பும் வண்ணம் பரப்பினார்கள். நம்மிடையே பெருகி நின்ற பிளவுகளுக்கு இது மேலும் தீனி போடுவதுபோல் ஆகியது. அதற்கு ஆதாரமாக ஜெர்மனியிலும், ரஷ்யாவிலும் மற்றும் மத்தியக் கிழக்கு ஆசியாவிலும் வழங்கும் மொழிகளுக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பொதுவாக உள்ள சொற்களை வைத்து ஆராய்ச்சி செய்து மாக்ஸ்ம்யுல்லர் போறவர்கள் "அங்கிருந்து வந்தவர்கள்தான் ஆரியர்கள், ஆதிகுடிகள் திராவிடர்கள்" என்னும் கட்டுக்கதைகளைப் பரப்பினார்கள். ஆரியர்கள் படையெடுத்தார்களா, குடியேறினார்களா என்றெல்லாம் வாக்குவாதம் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதனைப் பற்றி பலர் பல புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறார்கள். கூகிளில் சென்று தேடுங்கள் - 75400 சுட்டிகள் கிட்டும்!
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1303 முறை) ::

 

6-ல் இது-4« முதல்...«23456»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in