பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் மார்ச், 2008

நிரந்தரப் பாகுபாடுகள்

உலகம் :: மறுமொழி இனிமேல்தான் »

இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:-

சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று துவங்கியது. இக்கூட்டத் தொடரில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தார். முதல்வரின் "கான்வாய்' 9.30 மணிக்கு கோட்டைக்கு வந்தது. நுழைவாயிலுக்குள் நுழையும் போது, அருகில் உள்ள பூங்காவில் இருந்து முதியவர் ஒருவர் ஓடி வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரிப்பதற்குள், "தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள், முதல்வரிடம் புகார் கொடுத்தும் லஞ்சம் கேட்கிறார்கள்' என்று கத்தியபடியே கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, முதல்வரின் கார் மீது வீசினார். காற்றில் பறந்த வேட்டி, பாதுகாப்பு காரின் மீது விழுந்தது.

முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை பிடித்து, துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.கே., நகரில் வசிப்பவர். பெயர் நாராயணன்(64); விவசாயி. இவருக்கு 60 சென்ட் நிலம் உள்ளது. அந்நிலத்திற்கு பட்டா கேட்டு, இருபது வருடங்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா தருவோம் என்று அதிகாரிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், இவரது மகள் வாங்கும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்துகிறார். முதல்வரிடம் புகார் கொடுத்தும், பட்டா கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இப்படி செய்து விட்டேன்' என்று தெரிவித்தார். ண்எனினும், கோட்டை பாதுகாப்பில் "குறட்டை' விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் முடிவு செய்தனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் யார் யார், என்ற விவரங்களை சேகரித்துள்ளனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக போலீசார் விசாரித்து வருகின்றனர்

இதை வாசிக்கும்போது தெரியவரும் ஒரு விசனத்துக்குறிய உணமையைப் பார்த்தீர்களா:
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 153 முறை) ::

தான் தனது எனும் பெண்கள்

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்களேயன்றி, தான் எப்படி அவனுடன் ஒத்துப்போய் குடும்பம் நடத்துவேன் என்பதைப் பற்றி ஒருவரும் சொல்லக் காணோம்.

அனைத்தையும் கேட்டபிறகு நமக்குத் தெளிவாகத் தெரிவது, இக்காலப் பெண்கள் தெரிவு செய்யும் துணைவன் தன் வீட்டில் வளரும் நாய் போல் பெண்கள் விருப்பங்களை ஒட்டி நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கக் கூடாது.

மணவழ்வு என்னும் ஒரு சமூகக் கட்டமைப்பு இன்னும் எவ்வளவு நாள் நம் நாட்டில் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறிர்கள்?


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 257 முறை) ::

மறைக்கப்படும் உண்மைகள்

தேசீயம் :: 2 மறுமொழிகள் »

2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் "விஜில்" அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் கேட்கலாமென்றுதான். ஏனென்றால் அவரை நான் இதுவரை நேரில் கண்டதில்லை; தொலைக்காட்சியில்தான். அவர் ஒரு காமெடியான அரசியல்வாதி, சுவாரசியம் மிக்கவர். எனதான் சொல்கிறார் பார்ப்போமென்னும் ஆர்வம்.

அரங்கின் வாயிலில் அமைப்பாளர் திருமதி. இராதாராஜன் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். ஆங்கேயிருந்தோரிடமிருந்து அறிந்து கொண்ட செய்தி, கடைசி நிமிஷத்தில் சுவாமியும், இரதாகிருஷ்ணனும் வரமறுத்துவிட்டார்களென்பதுதான். பாவம், அரசியல்வாதிகளுக்கு பலவித சோலிகள் இருக்கும். நம்மூரில் அரசியல் என்பது நேர்க்கோட்டு சிந்தனை வயப்பட்டதன்று. இணைவு, பிரிவு, பின் பிணைவு இப்படி பன்னோக்குப் பார்வையில் போய்க் கொண்டிருக்கும். சிறுவர்கள் கையில் வைத்து உருட்டிப் பார்க்கும் "கலைடாஸ்கோப்"பில் எப்படி விதவிதமாக வண்ணக் கோலங்கள் மாறிவருகிறதோ அதுபோல்தான் அரசியல் வியூகங்களும்!

முக்கிய பேச்சாளர்கள் வரவில்லையே, என்ன செய்யலம் என்று அமைப்பாளர்கள் யோசித்திருக்கும் வேளையில் வந்திருந்தோர் அனைவரும் அந்த அரசியல்வாதிகள் இருவரும் இல்லாமலேயே கூட்டத்தை நடத்துங்கள் என்று ஒருமித்துக் கேட்டுக் கொண்டதால் கூட்டம் தொடங்கியது.
திருமதி ராதா ராஜன் லலித் கலா அகாடமியில் அவுரங்கஜீப் பற்றிய படக் கண்காட்சியில் நிகழ்ந்த அராஜகங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் கூறியவற்றில் என் நினைவிலிருப்பவை:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 244 முறை) ::

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

MMDandapanidesikar தேசிகர் தேன்குரல் தேசிகர்

எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 - 1972)

பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். 'பட்டினத்தார்' தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த 'நந்தனார்' படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), 'முதல் தேதி' (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.

தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், "ஜகஜனனீ ", "என் அப்பன் அல்லவோ…", "தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்", "வழிமறித்து நிற்குதே", "காண வேண்டாமா" முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) தேசிகரின் இழையும் குரலில் செவி மடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-

"துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் தீர்க்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?"

அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின் இசைததுறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். பல கீர்த்தனைகாளையும் அவர் புனைந்துள்ளர்.

தென்றல் இணைய இதழில் "ஆதி" அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-

சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் - குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண 'இசை விருந்து' இருக்க வேண்டும். இதற்கான 'இயக்கம்' வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-

… இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.

தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.

ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் - இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, "ஏன் முடிக்கிறார்?" என்று தோன்றியது.

"நந்தனார்" மற்றும் "திருமழிசை ஆழ்வார்" திரைப்படங்களில் தேசிகரின் பாடல்களைக் கேட்க இங்கே செல்லுங்கள்:-

[1] "சங்கீத யோகம்" - தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு - தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 221 முறை) ::

மிஸ்டு கால்!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

என் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு!

"ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க", இப்படிப் போகிறது வியாபாரம். அவரும் போஸ்டேஜ் ஸ்டாம்ப் போன்ற காகிதத் துண்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து ரூபாய்க்கு என்ன பேசமுடியும் என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஐயத்தைப் போக்க கடைக்காரரிடமே "பத்து ரூபாய்க்கு எவ்வளவுங்க டாக் டைம்" என்று கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்கள் எல்லோரும் கலைந்து சென்றபின் அவர் மெதுவாக, "பத்துரூபாய்க்கு ஐந்து ரூபாய்தான் டாக் டைம்" என்று எனக்கு அறிவூட்டினார். அடுத்து நான் கேட்க நினைத்த வினாவுக்கு அவர் விடையாகச் சொன்னது இது:

" இதுங்க சும்மா 'மிஸ்ஸீடு கால்' தான சார் கொடுக்குதுங்க" என்றார்!

அது சரி. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் எப்போது பார்த்தாலும் காதிலிருக்கும் கம்மலோடு சேர்த்து கைப்பேசியையும் ஒட்டிக்கொண்டு, "கெக்கே கெக்கே" என்று சிரித்துப் பேசியவண்ணம்தானே இருக்கிறார்கள். அது எப்படி - என்று யோசித்தேன். பிறகு எனக்குப் பழக்கமான ஒரு பெண்ணிடமே இதைப்பற்றிக் கேட்டேன். "இது கூடத்தெரியாதா உங்களுக்கு அங்க்ஸ்? நாங்க மிஸ்டு கால் கொடுப்போம். சில பைத்தியக்காரப் பசங்க தன் கைக்காசு செலவு பண்ணி எங்க கிட்ட கடலை வறுப்பானுங்க" என்றாள்!

எஸ்.எம்.எஸ்ஸுக்கு அடுத்தபடி இந்த மிஸ்டு கால்கள்தான் செல்ஃபோனின் அதிகபட்ச பயன்பாடு என்பது எனக்குத் தெரியவந்தது அப்போதுதான். "நீ அந்த ஸ்டாப்பிங்ல எறங்கியதும் ஒரு மிஸ்டு கால் கொடு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" - இது சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் உரையாடல்.

ஸெல் ஃபோனைக் கண்டுபிடித்தவர்களும், அதன் பயன்பாட்டு சேவை நடத்துவோரும் மிஸ்டு கால்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருப்பார்களா!

உங்களுக்குத் தெரிந்த வேறு மிஸ்டுகால் பயன்பாடுகளைப் பற்றி எனக்கும் தெரிவியுங்களேன். பில் ரொம்ப ஆகுது!! :roll:

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 236 முறை) ::

இலவச மென்பொருள் சொல்லாடற் குழப்பங்கள்!

கணினி :: 2 மறுமொழிகள் »

கணிப்பொறி ஏண்றாலே விண்டோஸ் என்னும் நிலை மாறிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். "லைனக்ஸ்"/"லினக்ஸ்" என்னும் இயங்குதளத்தின் (Operating System) பயன்பாடு தற்போது மிக வேகமாக வளர்ந்து வருவது பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அந்தக் களத்தில் சென்று சிறிது எட்டி நோக்கினால் நாம் மனதை குழப்பத்திலாழ்த்தும் வகையில் பலதரப்பட்ட சொல்லாடல்கள் கையாளப்படுகின்றன. உதாரணமாக:

  1. இலவச மென்பொருள் (Free Software)
  2. தனியுரிமை மென்பொருள் (Proprietary Software)
  3. மூடிய மூல மென்பொருள் (Closed Source Software)
  4. மூடிய ஆணைமூல மென்பொருள் (Closed Source Code)
  5. திறந்த மூல மென்பொருள் (Open Source Software)
  6. திறந்த ஆணைமூல மென்பொருள் (Open Source code)
  7. கட்டற்ற மென்பொருள் (Software without any control- Totally free)
  8. கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள் (FOSS - Free and Open Source Software)

மேற்சொன்னவை அனைத்தும் மிகுந்த தத்துவ, கோட்பாட்டு சார்ந்த பொருளுடையவைகளாகவும், அவற்றைக் கையாளும்போது ஏதேனும் தவறான சொல்லாட்சியை அமைக்க நேர்ந்தால் அது பலர் மனங்களில் பெருங்குழப்பம் விளைவிக்கும் தாக்கம் கொண்டவையாகவும் அமைவது ஒரு நிதர்சனமான உண்மை. இத்தகைய சொற்பயன்பாடு குறித்த தெளிவான விளக்கங்களை தமிழ்க் கணினி அமைப்பில் பெருந்தொண்டாற்றிவரும் திரு. மு.மயூரனின் பதிவில் வாசித்து இதுகுறித்த தங்கள் புரிதல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அவர், "GNU/Linux - சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!" என்னும் தூக்கிவாரிப்போடும் தடாலடி தலைப்புடன் பல விளக்கங்களை அளித்திருக்கிறார்.

இதைப் படித்தபின்னும் என்ன, தலை சுற்றுகிறதா? முதலில் அப்படித்தான் இருக்கும். இங்கேயே சற்று கைநனைத்து, சிறிது பங்களியுங்கள். நாளடைவில் நீங்களே இத்தகைய பரிபாஷையில் வல்லுனராகிவிடுவீர்கள்! ஆனால் இதனைத் தாண்டி அடுத்த திறக்கில் லைசன்ஸ், GPL, CC, Linus Torvalds vs Richard Stallman - இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி அல்லுசில்லாகி சுருண்டு மடங்கினால் நான் ஜவாப்தாரியல்ல! :lol:

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 274 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in