வயிற்றுப் பிழைப்புக்காகஅயல் நாட்டில் வேலை செய்து நொந்து நூலாகும் இந்தியர்கள் தங்கள் உற்றார் உறவினரால் வெறும் பணம் காய்ச்சி மரமாகத்தான் கருதப்படுகிறார்கள். என்.ஆர்.ஐ என்றாலே இங்குள்ள கடைக்காரர்கள்கூட விலையை ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் எவ்வளவுதான் பிறருக்காக தங்கள் கைக்காசை சிலவு செய்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான உணர்வுபூர்வ உறவுகளை அவர்கள் பெறுவதில்லை.
இந்த அவல நிலை இப்போது இன்னும் மோசமடைந்திருக்கிறது, திருமணம் என்னும் பெயரில். இன்றைய இந்துஸ்தான் டைம்ஸில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்:
ஜெயா என்னும் பெண் துவாரகையில் வசிக்கிறார். இவருடைய கணவர் அமேரிக்காவில் இருக்கிறார். கணவர் வெளியூரில் இருப்பதால் அந்த பெண்மணிக்கு ஆணுறவு தேவைபட்டிருக்கிறது. மாட்டியவர் தீபக் குமார் என்னும் டிரைவர். ஆனால் அந்த டிரைவர் இவருடைய தொடர்ந்த கள்ள உறவுக்கு இணங்காமல் இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள முடிவு செய்கிறார்.
வந்தது கோபம் அந்தப் பெண்குலத்தின் சிகரத்திற்கு!! இரணடு அடியாட்களை அமர்த்தி அந்த தீபக் குமாரின் முகத்தின்மேல் ஆஸிட் ஊற்றச் செய்கிறார். பாவம் அந்த டிரைவர், தன் ஒரு கண்ணையே இழந்து நிற்கிறார்.
காவல்துறை அந்தப் பெண்மணியையும் அவருடைய அடியாட்கள் இருவரையும் கைது செய்துள்ளது.
தற்போது தினமும் செய்திகளில் அடிபடும் விஷயம் தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டதினால் மரணமடையும் குழந்தைகள் பற்றிய துயரச் செய்திகள்தான். அநேகமாக தினமும் இதுபோன்ற செய்திகள் வந்து நெஞ்சை நோகச் செய்கின்றன.
இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தபின் நடக்கவேண்டிய சடங்குகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அறிக்கை விட்டனர். அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். நிபுணர் குழுவினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். "எல்லா மட்டத்திலும் விசாரணை முடிந்தபின் அரசுக்கு அறிகையை அளிப்போம்" என்று கூறிவிட்டனர். அந்த அறிக்கை என்ன்வாகும்? இதற்குமுன் நடந்த பல்வேறு விசாரணை அறிக்கைகளின் கதிதான் இதற்கும்.
ஆனால், இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள் யார்? மத்திய அரசும், மத்திய அரசில் சுகாதாரப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சார்ந்த கட்சியின் தலைவரும் இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று கூறிவிட்டனர். மாநில அரசும் கைவிரித்தாகி விட்டது. நர்சுகள்தான் தவறு செய்துவிட்டனர் என்றனர். அவர்களும் இது அநியாயப் பழி எங்கள் மேல் என்கின்றனர்.
குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள் இந்த அறிக்கைகளைப் படித்து திருப்தி அடைய வேண்டியதுதானா!
ஆனந்த விகடனைக் கையிலெடுத்தவுடன் என் கண்கள் தேடுவது வண்ணதாசனின் கைவண்ணத்தில் கோலமிடும் "அகம் புறம்" பகுதிதான். நம் கண்முன்னே தோன்றும் சாதாரண மனிதர்கள்கூட அவர் எழுத்துக்கள் மூலம் புதிய தோற்றமும் பொலிவும் பெற்று தனிச்சிறப்புடன் விளங்குவதுபோல் தெரிகிறார்கள். அன்றாடம் நாம் காணும் இயற்கைக் காட்சிகள்கூட அவருடைய எழுத்துக்களால் வடிக்கப்படும்போது புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கின்றன. அவருடைய வர்ணனைகள் எவ்வித சொல் அலங்காரங்களும், பாசாங்குகளுமின்றி நேரடியாக நம்மிடம் உரையாடும் வண்ணம் அமைந்திருக்கின்றன.
தன் பள்ளி நாட்களைப் பற்றியும், அப்போது தம்மோடு பழகிய முகங்கள், மனத்திலிருந்து நீங்காத சின்னஞ்சிறு நிகழ்வுகள் இவைகளைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் அவர் நம்முடைய மனத்தில் ஆழப் பதிந்திருக்கும் நினைவுகளையும் கிளர்ந்தெடுத்து மீள்காணச் செய்கிறார். அவருடைய அந்தப் பின்னோக்கிய பயணத்தில் நம்மையறியாமலேயே நாமும் பங்கெடுத்துச் செல்கிறோம்!
வெங்கட்டரமணன் என்று ஒரு சகா. மூக்கு நீளமாக இருக்கும். அவனுடைய கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். அப்புறம்தான் என்னுடையது எல்லாம். என் மூக்கு பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது.
கீவளூர் போர்டு ஹைஸ்கூலில் என் பக்கத்து டெஸ்க் உத்திராபதி நினைவில் வந்து தன் தீர்க்கமான மூக்குடன் எட்டிப்பார்க்கிறான்.
அப்புறம் என் மூக்கு பற்றியும் பேசாமல் இருப்பது நல்லதுதான்!
இந்த வரிகளை வாசிக்கும்போது என் கண்கள் பனிக்கின்றன, ஏனென்று தெரியவில்லை:
இப்போதுகூடக் கேட்கிறது, ஆழ்வாரப்பனின் "செந்தமிழ்த் தேன்மோழியாள்" பாட்டு. "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆழ்வாரப்பன் பாட ஆரம்பிக்கும்போது, அவன் கண்கள் மூட ஆரம்பித்து தலை பின்னுக்குச் சாய்ந்துவிடும். முழுப் பாட்டையும் அப்படியே பாடி முடித்த பிறகுதான் கண் திறந்து, முகம் சமதளத்துக்கு வந்து எங்களை எல்லாம் பார்க்கும். நாங்கள் கையைத் தட்டிக் கொண்டே அவனைப் பார்ப்போம்.எனக்கு அவன் பாடின பிறகு கைதட்டும் போதெல்லாம் ஒரு மாதிரி அழுகை வரும்.
… ஆழ்வாரப்பனைக் காணவே காணோம். பாட்டை நம்மிடம் விட்டுவிட்டுப் பாடியவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.
நயம் கொண்ட எழுத்து என்பதற்கான அடையாளங்கள்:-
வேறு வேறாக எதையுமே அடையமுடியாது போல. முதலில் அடைந்ததையே மீண்டும் மீண்டும் அடைகிறோம். அல்லது, இப்போது அடைந்ததன் ஒத்திகைகளையே ஏற்கனவே அடைந்து வந்திருக்கிறோம். அப்படித்தானா.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்களேயன்றி, தான் எப்படி அவனுடன் ஒத்துப்போய் குடும்பம் நடத்துவேன் என்பதைப் பற்றி ஒருவரும் சொல்லக் காணோம்.
அனைத்தையும் கேட்டபிறகு நமக்குத் தெளிவாகத் தெரிவது, இக்காலப் பெண்கள் தெரிவு செய்யும் துணைவன் தன் வீட்டில் வளரும் நாய் போல் பெண்கள் விருப்பங்களை ஒட்டி நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கக் கூடாது.
மணவழ்வு என்னும் ஒரு சமூகக் கட்டமைப்பு இன்னும் எவ்வளவு நாள் நம் நாட்டில் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறிர்கள்?
சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில்.
வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் ஆண்டவரும் திருப்தியடைந்துவிட்டார்!
சில நாட்களுக்கு முன்பு ஒரு physiotherapy (இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?) சிகிச்சையகத்தில் சேவைபெற வரும் நபர்களில் சிலரின் கால்களுக்கு ஒருவித பயிற்சி அளிப்பதற்காக சிறிய மஞ்சள் பைகளில் மணல் நிறப்பி தைத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவற்றில் எல்லாம் இந்துக் கடவுட்களின் படம்தான் வரைந்திருந்தது. அதன்மேல் கால் வைத்துத்தான் பலர் நின்று பயிற்சி பெறுகிறார்கள். இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் அதுபோல் எந்தவிதப் பிரச்னையையும் கிளப்பாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அதனை ஒரு துணிப்பையாகத்தான் அவர்கள் அனைவரும் காண்கிறார்களேயன்றி, கடவுளாக அல்ல. உண்மையில் இந்து மதம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தம் உள்ளத்தினுள்தானே காணச் சொல்கிறது!
அப்படிப் பார்த்தால் கடவுளர்களின் படங்களைத் தாங்கி நிற்கும் பழைய காலண்டர்களையும், ஆன்மீக இதழ்களையும் என்ன செய்வது - அவற்றை கடவுளாகவே பார்ப்பதா, அல்லது வெறும் காகிதமாகக் கருதுவதா!
சௌந்திரராஜன் தெய்வபக்தி நிரம்பியவர். தினமும் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து, பூஜைகளை முடித்தபின் தான் எதையும் உண்பார். எந்நேரமும் தெய்வ சிந்தனைதான். அதுவும் இராமன்தான் அவருடைய இஷ்ட தெய்வம். தியகராஜருடைய கிருதிகளை நெக்குருகப் பாடிக்கொண்டேயிருப்பார். அவர்கள் வீட்டு டிவியில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியும் அதேபோல் கோயில், குளம் என்றுதான் பேசிக்கொண்டிருப்பார். எந்தக் கோயிலில் என்ன விசேஷம் என்று விசாரித்து சென்ற வண்ணம் இருப்பார். விரதம், உபவாசம் என்று உடலை வருத்திக் கொள்வார். இதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு சிந்தனையே கிடையாது. செயலும் கிடையாது. தவிர, உதவி என்று யார் வந்து கேட்டாலும் தன்னாலியன்றதைச் செய்யத் தயங்கவே மாட்டார்கள். தம் ஜன்மமே பிறருக்குப் பயன்படத்தான் என்ற சித்தாந்தத்தில் பூரண நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர்.
அவர்களுக்கு ஒரே குழந்தை, அவர்களது மகன். அவனுக்கு இப்போது 33 வயது முடிந்துவிட்டது. ஆனால் அந்தப் புத்திரன் விஷயத்தில் அவர்கள் அனவரதமும் தொழும் அந்த பெருமாள் அவர்களை மிகவும் சோதித்துவிட்டார்!
ஆம். அந்தப் பையன் ஆட்டிஸம் (Autism) எனப்படும் நுண்ணுணர்வு வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளான். அது தவிர வேறு சில மூளை தொடர்பான கோளாறுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்போது உட்கொண்ட வீரியமிக்க மருந்துகளின் தாக்கத்தால் பேசும் சக்தியையும் அநேகமாக இழந்துவிட்டான். ஒரு பெரிய உருவம் கொண்ட 1 வயது குழந்தைபோல அவனைக் கருதவேண்டிய நிலை.
அந்தப் பையனின் சில அடிப்படை இயல்புகள்-
அவனால் பிறர் பேசுவதை உள்வாங்கி எதிர்வினை புரிய இயலாது
அவனுடைய வீட்டில் எல்லாப் பொருட்களும் முன்பிருந்த நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பான். ஒரு நாற்காலி சிறிது இடம் பெயர்ந்திருந்தாலும் உடனே மாற்றி வைத்துவிடுவான்
தன் குடும்பத்தினர் மற்றும் நன்கு பழகியவர்களைக் காணும்போது அவர்களின் தலைமுடி சிறிது கலைந்திருந்தால்கூட ஓடிச் சென்று அதனை சரி செய்வான். மோதிரம் சிறிது சுழன்றிருந்தாலும் நுணுக்கமாகக் கவனித்து அதனை நேராக்குவான்
அவனுக்குப் பிடித்தமான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் எங்கிருந்தாலும் உடனே எடுத்துச் சாப்பிட்டுவிடுவான். அதனால் பெரும்பாலும் அடுத்தவர் இல்லங்களுக்கோ பொது இடங்களுக்கோ அவனை அழைத்துச் செல்ல மாட்டார்கள்
நடந்து செல்லும்போது எதிரே வரும் நபரின்மேல் இடித்துக் கொண்டே செல்வான்
இவையெல்லாம் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.
சௌந்திரராஜன் தம்பதிகளுக்கும் வயதாகி விட்டது. தங்களுக்குப் பிறகு இந்தப் பையனை யார் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் கவலை அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு பிறரிடம் பழகுவது எப்ப்படி, பொது இடங்களில் நடந்துகொள்வது எப்படி போன்றவை ஒன்றும் தெரியாது.
இந்தப் பையனுக்கு விமோசனம் என்ன?
அவன் பெயர் ஸ்ரீராம்!
அவர்கள் அன்றாடம் தொழும் ஸ்ரீராமன்தான் வழிகாட்டவேண்டும்!
நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே -
இம்மையே இ'ராம' என்று இரண்டு எழுத்தினால்.
சாலையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி பிசகாமல் துல்லியமாக கணக்கிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் நீங்கள் கொடுக்கவேண்டிய துகையை கூட்டிச் சொல்வதைக் காணலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள் - உடனே அவர்களின் கைகள் தன்னையறியாமல் பைக்குள் செல்லும், கால்குலேட்டர்களை எடுக்க!
என்னுடன் பணியாற்றும் ஒருவர் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு படுக்கை வசதி வண்டியில் 6 டிக்கெட், குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் மூன்றரை டிக்கெட், மூன்றாம் வகுப்பில் 7 டிக்கெட் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எவ்வளவு கூட்டுத் தொகை என்பதைச் சட்டென்று சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு இல்லாவிடிலும், சாதாரண பெருக்கல், கூட்டல் கூட மனதால் செய்யமுடியாத சமுதாயமாக நம் இளைஞர்கள் மாறிவிட்டார்கள்.
இதற்குக் காரணம் இதுபோன்ற மனப் பயிற்சி அவர்களின் கல்வித் திட்டத்திலும் இல்லை, பெற்றோர்களும் இத்தகைய மனதாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாரில்லை. கணினியும், இணையமும், கூகிளும் கைவசம் இருக்கும்போது மனக்கணக்கென்று ஒன்று எதற்கு என்பது இந்தக் கால கட்டத்தில் எழும் வாதம். ஆனால் மனத்துக்குளேயே இத்தகைய நுன்ணிய செயல்களை இயக்கும் (processing) ஆற்றலை வளர்த்தல், அவர்களின் உணர்வுபூர்வ செயலாற்றல் மற்றும் ஒரு பிரச்னையின் பல கோணங்களையும் தன் மனத்தினுள் ஆராய்ந்து உடனுக்குடன் சரியான முடிவெடுக்கும் திறன் போன்ற திறமைகளை வளர்க்க உதவும் என்பதால் அது ஒரு முக்கிய பயிற்சியாகும். This kind of brain games will help improve cognitive capabilities.
அடுத்த முறை ஒரு இளைஞரை காணும்போது இந்தக் கணக்கைப் போட்டு காகிதம், பேனா இல்லாமல் விடை சொல்லச் சொல்லுங்கள்:-
ஒரு டிஸ்கி: (இதனால் உங்களுக்கு சூட்டப்படப்போகும் பட்டப் பெயர்களுக்கும், உடற் காயங்களுக்கும், உடையப் போகும் கன்னாடிகளுக்கும் நான் பொருப்பல்ல!)
"இரெண்டரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் மூன்றரையே அரைக்கால் ரூபாய் என்றால், நாலரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் எவ்வளவு ரூபாய்?"
சமீபத்திய மறுமொழிகள்